Tuesday, May 20, 2014

அத்தியாயம் - 10

செம்பஞ்சுக் குழம்பு பூசியிருந்த பாதங்களில் தகதகத்த தங்கச் சிலம்புகள், முத்தும் மாணிக்கமும் பதிக்கப்பட்டிருத்ததால் கண்களைக் கூசும் அளவிற்கு ஒளி வீச, சகோதரிகள் இருவரும் மயிலுக்கு நடை கற்பிப்பதுபோல ஒயிலாக நடந்து சென்றார்கள். அவர்கள் உடுத்தியிருந்த பட்டாடை, உள்ளங்கையில் மடித்து வைத்துக்கொள்ளும் அளவிற்கு மெல்லியதாக இருந்தது. சுனை அருகே வந்ததும் தெளிந்த நீரைப் பார்த்து மகிழ்ச்சி மேலிட்டது. கைகளால் அள்ளியெடுத்தார்கள். மார்கழி மாதத்துக் குளிர்ச்சியைவிட, அதிகமாகக் குளிர்ந்திருந்த நீரைப் பருகியதும் தேனும் பாலும் கலந்த சுவையில் சிலிர்த்துப்போனார்கள். பின்னால் வந்த தோழிப் பெண்கள் செய்தி ஒன்று சொல்ல விரும்புவதுபோல தயக்கத்துடன் இவர்களை ஏறிட்டார்கள்.
“ஏதோ சொல்ல விரும்புகிறீர்கள் போல் தெரிகிறது. தயங்காமல் சொல்லுங்கள்.” என்றாள் மூத்தவள்.
தோழியரில் துடுக்கான ஒருத்தி, “இன்று பாண்டிய மன்னர் உங்கள் இருவரையும் பெண்கேட்டு வருகிறாராம். அதற்காக, கொற்கையில் விளைந்த முத்துக்கள் அனைத்தையும் பரிசாகக் கொண்டு வருகிறாராம். சகோதரிகள் இருவரும் இதைக் கேட்டதும் நகைத்தார்கள். சிலம்புகளிலிருந்த முத்துப் பரல்களும் மாணிக்கக் கற்களும் சிதறிவிட்டனவோ என சுற்றும் முற்றும் பார்த்தார்கள் தோழிப் பெண்கள். தந்தை என்ன சொல்வார் என எதிர்பார்க்கிறாய் சகோதரி?” இளையவள் கேட்க, “பாண்டிய மன்னனுக்குப் பதிலைத் தானே கேட்கிறாய்?” என்றாள் பெரியவள்.
“ஆமாம்.”
“நீ கொண்டுவந்திருக்கும் முத்துக்கள் எம் பெண்களுக்கு நீ பேசும் விலையா? அவை அவர்களின் ஒரு சிறிய புன்னகைக்குக் கூட ஈடாகாது எனச் சொல்லி அனுப்பி விடுவார்.”
“இவ்வளவு தூரம் தந்தை அவனிடம் பேசுவார் என்று நினைக்கிறாயா? கடந்த திங்கள் சோழன் வந்தபோது, பேசவே மறுத்ததாக அல்லவா கேள்விப்பட்டோம். தந்தை என்ன செய்வார் என்று யார்தான் முன்னுணர முடியும்? நிமித்தங்கள் கூட அவரிடம் பொய்த்துப் போகின்றனவே.”
“சகுனங்களை மட்டும் ஏன் விட்டுவிட்டாய் சகோதரி? அதோ தெரிகிறதே உன்ன மரம். கடந்த முறை அவர் போருக்குச் சென்றபோது அந்த மரம் கருகியிருந்தது. இப்போதுபோல் செழிப்பாக இருக்கவில்லை. ஆனாலும் தந்தை மிகப் பெரிய வெற்றியுடனல்லவா திரும்பி வந்தார்.”
“உன் கூற்று உண்மைதான். சேர மன்னனைப் பாராட்டிப் பாடல் இயற்றிய குறிஞ்சித் திணைப் புலவரும் ‘உன்னத்துப் பகைவன்’ என நம் தந்தையைப் பாடியிருக்கிறார்.”
“இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. தந்தையிடம் கேட்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். இரட்டைப் புலவர்கள் ஏன் நீண்ட நாட்களாக வரவில்லை?”
“மயிலுக்குப் போர்வை தந்தவன் தன் வீட்டு மயிலை அலைக்கழித்து அழ வைத்திருக்கிறானாம்.”
“நல்லூர்க்காரிதான் காரணமோ?”
“அப்படித்தான் சொல்கிறார்கள்.” இருவருக்கும் சந்து செய்விக்கப் போய்விட்டார்கள் போல் தெரிகிறது. ‘உன் மலைகளைப் பாடலாம் என்று வந்தேன் மன்னா! ஆனால் தலைவிரி கோலமாக ஒரு பெண் அழுது கொண்டிருப்பதைக் கண்டேன். எப்படிப் பாடுவது? குளிருக்காக நடுங்கிய காட்டு மயிலுக்குப் போர்வை தந்தவன், வீட்டு மயிலைப் புறக்கணித்து அழ வைப்பது சரியில்லையே. நீ எங்களுக்குப் பரிசில் தர வேண்டாம். அவள் மேல் உன் காதலைப் பொழிந்து மகிழச்செய் என்று அவனுக்கு நியாயம் உணர்த்தப் போயிருப்பார்கள்.”
இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் புள்ளிமான் ஒன்று சுனையருகே நீர் பருக வந்தது. இவர்களைக் கண்டதும் துள்ளிக் குதித்து ஓடி சற்று தூரத்தில் போய் நின்றது. கண்களில் தெரிந்த மருட்சியைக் கண்டதும், சிரித்தாள் மூத்தவள். “நாம் என்ன மருண்டு போயா வாழ்கிறோம்? மான் விழி என்று எதற்காக இந்தப் புலவர்கள் அழைக்கிறார்கள்?” என வினவினாள்.
“அதிசய நெல்லிக் கனி கிடைக்கப்பெற்ற அப்பாவின் தோழி வரட்டும். அறிவிற் சிறந்த அவளிடமே கேட்டுத் தெரிந்துகொள்வோம்.”
“எனக்கு ஒரு ஐயம். யாரிடம் கேட்பதென்று தெரியவில்லை.”
“என்னிடமே கேட்கலாமே?”
“பாடல் புனைவதில் ஆற்றல் மிக்கவர்களாகயிருக்கும் சான்றோராகிய பெண்கள் வாழ்வில் துயர் கொண்டு அலைவதுபோல் தெரிகிறதே?”
“யாரைச் சொல்கிறாய்? எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே என்று தமிழைத் தலை நிமிர வைத்த புலவரைச் சொல்கிறாயா? அவர் மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறார்?”
கன்றும் பருகாமல் கலத்தினும் படாமல் நிலத்தில் விழுந்து பாழாய்ப் போகும் பால் போலத் தன் பெண்மையும் அழகும் வீணாகப் போவதாய்த் தவித்துப் பாடும் புலவரும் காதல் தோல்வியில் கவலையில் தோய்ந்து துயர் கொண்டு அலைகிறாரே! அந்தத் துயரத்தை, பறவைகளின் பாதுகாவலன் கொடுத்த நெல்லிக்கனியை உண்ட அப்பாவின் தோழியும் தன் பாடலில் பதிவு செய்திருக்கிறாரே?
“வௌவ்வால்கள் விரும்பும் புளிப்பு கலந்த நெல்லிக்கனி பற்றிப் பாடிய புலவரின் வாழ்க்கையும் கூட துக்கத்தில்தானே போய்க்கொண்டிருக்கிறது!”
“யாரைச் சொல்கிறாய்?”
“யானைத் தந்தங்கள் போல தாழம்பூக்கள் மலர்கின்றன என உவமையில் அழகு படைத்த புலவரைத்தான் சொல்கிறேன்.”
“அவர் மன்னரையல்லவா காதலித்தார்?”
“நாடாளும் மன்னரையல்லவே. தந்தையிடமிருந்து பிரிந்து சென்று புல்லரிசிக் கூழுண்டு சாதாரண மனிதராய் காடெல்லாம் அலைந்தவரையல்லவா அவர் காதலித்தார். காயம் பட்டு வெற்றிக் களத்தில் வீழ்ந்துகிடந்த அவரை, பனை மரத்தைப் பற்றியபடி பார்த்துக்கொண்டிருந்த கவியரசி, தன் உள்ளங்கவர்ந்தவரின் உடலைத் தழுவிக்கொள்ள விரும்பினாலும், ஊர் என்ன சொல்லுமோ என ஒதுங்கி நின்று வெதும்பிய வேதனையை அவர் பாடலில் வடித்திருக்கிறாரே!”
“ஒரேயொரு பாடலில் தண்ணீர் இருக்கும் திசையெல்லாம் காதலனைத் தேடிப் பேதுற்றலைந்த பெண்ணரசியின் கதையும் சோகம் தானே!”
இப்போது கலைமான் ஒன்று தூரத்தில் மருண்டு நின்ற பிணை மான் பக்கத்தில் போய் நின்றது. இரண்டும் சேர்ந்து நிற்கும் அழகையும் பார்த்த சகோதரிகள் நமக்கு அஞ்சி தண்ணீர் பருகாமல் விலகி நிற்கின்றன. புறப்படுவோம். பாவம், பாலை நிலத்தில்தான் கலங்கியிருக்கும் கையளவு நீரை, பிணை மான் பருகட்டும் என்று கலைமானும், கலைமான் மாந்தட்டும் என்று பிணைமானும் விட்டுக்கொடுத்து தாகம் தீர்க்காமல் போகின்றன நம் பறம்பு மலையில் நீர் வளம் கடலை விடப் பெரியதும், தேனைவிடச் சுவையானதும் அல்லவா.
அவர்கள் புறப்பட்டுச் செல்லும் தருவாயில் அருகில் ஓடிவந்த மான்கள், கால்களுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு நட்புடன் பார்த்தன. “நாம் பேசுவது, பார்ப்பது எல்லாமே இவைகளுக்குப் புரியும்… ஏன் இங்கிருக்கும் சிறு கொடிகளுக்கும் பெரிய மரங்களுக்கும் கூட விளங்கும். நம் ஒவ்வொரு அசைவும் அவற்றைப் பாதிக்கவும் செய்யும்” என்றாள் மூத்தவள். இளையவள் ஆமோதித்தாள்.
பால் நிலவு அமுதத்தைப் பொழிந்துகொண்டிருக்க, அந்த நிலவொளியில் உப்பு மூட்டைகள் ஏற்றப்பட்ட வண்டிகள் செல்வதை, தந்தையின் பக்கத்தில் அமர்ந்து ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த சகோதரிகள், விவரிக்க இயலாத உணர்வில் ஆழ்ந்திருந்தார்கள். “தந்தையே இந்த உலகத்திலேயே நீங்கள்தான் நல்லவர், வல்லவரும் கூட” என்றாள் மூத்தவள். “ஆமாம் உங்களுக்கு இணை யாருமே இல்லை.” என்றாள் இளைவள்.
“என் மகள்களுக்குத்தான் இணை உலகத்தில் எவரும் இல்லை. அதனால்தான் எந்த அரசர் பெண் கேட்டு வந்தாலும் எனக்கு மனம் ஒப்பவில்லை.”
“ஆழிசூழ் உலகில் யாருமே உங்களை வெல்ல முடியாதல்லவா?” இளையவள் கேள்வியில் பெருமை பொங்கித் ததும்பியது. தன் இரு பெண்களின் முகத்திலும் நிலவொளியில் மின்னிய கர்வம் அவர்கள் முகத்திற்கு மேலும் அழகு சேர்ப்பதாய் அந்தத் தந்தைக்குத் தோன்றியது. “இல்லை; என்னையும் தோற்கடிக்க சிலர் இருக்கிறார்கள். அவர்கள் கேட்டால் உயிரையும் தருவேன்.”
“யார் அவர்கள்? புலவர்களா? தன்னுடைய காவல் மாமரத்திலிருந்து கனிந்து, தண்ணீரில் விழுந்து மிதந்துவந்த மாங்கனியை எடுத்துவிட்டாள் என்பதற்காக, பெண் கொலை புரிந்த மன்னனைக் கூட போற்றிப் பாடுபவர்கள் அல்லவா புலவர்கள்?”
“அவர்கள் என் மரியாதைக்குரியவர்கள். அவர்கள் புலமைக்கும் தமிழுக்கும் நான் என்றென்றும் தலை வணங்குகிறேன்.”
“வேறு யார்? எங்கள் தாயும் இப்போது உயிரோடில்லையே?”
“என் ஆவி நிகர்த்த அந்த அன்னத்தைப் பிரிந்த பின்னும் நான் உயிரோடிருக்கிறேன் என்றால், ஒரு காரணம் நீங்கள். மற்றொன்று...” என நிறுத்தினார் தந்தை.
“அதைத்தான் யாரெனக் கேட்கிறோம்.” ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் காதளவோடியிருந்த கயல் விழிகளால் கெஞ்சுவது போல தந்தையிடம் வினவினார்கள்.
“வேறு யார்? கூத்தரும், பாணன்-பாடினிகளும்தான். அவர்களின் பாடலுக்கும் கலைக்கும் என் உயிரைவிடப் பெரிதாக வேறென்ன பரிசு தர முடியும்?” முல்லைக் கொடிக்குத் தேரைக் கொடுத்தவன் கண்கள் பனிக்கச் சொன்னபோது அவன் பெண்களின் விழிகளிலும் நீர் முத்துக்கள் கோர்த்து நின்றன.
அதே நிலவு, அது பொழிவது அமுதமாய் இருந்தாலும் சகோதரிகளின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. “நிலவே, அப்போதும் நீ காய்ந்தாய். குளிர்ச்சியாய். அருகில் எங்கள் தந்தை இருந்தார். பறம்பு மலை எங்களுக்குச் சொந்தமாய் இருந்தது. உப்பு வண்டிகள் வரிசையாய்ச் சென்றன. எங்கள் தந்தையின் பக்கத்தில் அமர்ந்து உன்னையும் உன் தண்ணொளியில் உப்பு வண்டிகளையும் பார்த்து மகிழ்ந்திருந்தோம். இப்போது நீயும் இருக்கிறாய், உப்பு வண்டிகளும் வரிசையாய்ச் செல்கின்றன. எங்களுக்குச் சொந்தமாயிருந்த பறம்பு மலையும் எங்களை விட்டுப் போய்விட்டது. உயிராக இருந்த தந்தையும் கூட எங்களோடு இல்லை.” முகத்தை நீண்ட காந்தள் விரல்களால் மூடிக்கொண்டு முலைகள் நனைக்க அழுதார்கள் சகோதரிகள் இருவரும்.
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த சங்கவையும் வாய்விட்டு அரற்றினாள்.
“அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
எந்தையும் உடையோம் எம்குன்றும் பிறர் கொள்ளார்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்
வென்று எறிமுரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே...” சொல்லிவிட்டு அழுதாள்.
அறிவில் சிறந்த தோழியும் அந்தண நண்பனும் ஊர், ஊராக அழைத்துச் சென்றார்கள். என் பெண்களை மணம் செய்துகொள்ள உலகிலேயே எவரும் இல்லை என்று தந்தை இறுமாந்திருந்த காலம் போய், இப்பெண்களா? எங்களுக்கு வேண்டாம் என்று சென்ற இடமெல்லாம் சீந்துவாரின்றிப் போனார்கள். சங்கவை விசும்பி, விசும்பி ஓய்ந்து போனாள். குன்றும் மலையும், அவரைக்கொடியும், கோடல், கொன்றை, முல்லை மலர்களும் மறைந்து போக, விளக்குகள் பளீரென கண்ணுக்குள் அடித்தன. இவை என்ன உயர்ந்த கட்டிடங்கள்? மாடங்களும் மாளிகைகளும்போல் தெரியவில்லையே! யோசித்துக் கொண்டிருக்கும்போதே, தலையை மொட்டையடித்து, காவி உடுத்தி கையில் ஏதோ மணிகளை உருட்டியபடி மந்திரத்தை முணுமுணுத்த வாயுடன் புத்தத் துறவிகள் வரிசையாக நின்றிருந்த பைன் மரங்களைக் கடந்து நடந்து வந்து கொண்டிருந்தார்கள். சங்கவையின் கண்களுக்குள் உணர்வுகள் குழப்பத்தில் சிறகடித்தன. இமைகளைப் பிரித்து இதென்ன காட்சியென்று விளங்கிக்கொள்ள ஆழ்மனம் கட்டளையிட்டும், அவள் பகீரதப் பிரயத்தனம் செய்து பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. துறவிகளின் முகத்தில் நிரம்பியிருந்த தேஜஸ் அவளை ஆட்கொண்டு காந்தமென அந்த மடத்திற்கு வரும்படி அழைத்தது.
“நான் மன்னனின் மகள். எனக்காகவும் என் சகோதரிக்காகவும் தந்தையின் உற்ற நண்பர் குறிஞ்சி பாடிய அந்தணரும், எங்கள் தந்தையின் தோழியும் ‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை, வாழிய நிலனே’ என்று உலகம் உய்வதற்கு வழி சொன்னவருமான கவிப்பேரரசியும் மணமகன் தேடிக்கொண்டிருக்கிறார்கள். நான் எப்படி அங்கே வர முடியும்? இந்த இடம் எனக்குப் புதிதாகவும் புதிராகவும் இருக்கிறது. வேங்கைப் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் மலைகளும் பனிச்சுனைகளும், நெய்தல் நிலத்துத் தாழைகளும் அங்கு நின்றிருந்த நாரைகளும் எங்கே போயின? சங்கவை நெஞ்சுக்குள் கதறி அழுதாள். “பெண்ணே, நீ இங்கே இருக்க வேண்டியவள். நீ சொல்கிறாயே... அந்த அறிவு சார்ந்த பெண்.” அவருடைய அந்தப் பாடல் கருத்து கூட புத்தரின் தம்ம பதத்திலிருந்து எடுக்கப்பட்டதுதான் பெண்ணே. தலையை மழித்து இதோ காவி ஆடை கட்டிக்கொள்.” என்றார்கள் அந்தப் புத்தத் துறவிகள்.
“இவை மாபெரும் பத்தினி மகளுக்குரியவை அல்லவா? அவள் கையிலிருந்த அமுத சுரபிதானா உங்கள் கையிலிருக்கும் கமண்டலம்?”
“பழம்பிறப்புக்கள் குறித்துப் பேசிக்கொண்டிராதே மகளே!” மனதை ஒருமுகப்படுத்து. இதோ உனக்குரிய மந்திரம். தலைமைக் குரு போல தோன்றிய துறவி அவள் காதுகளில் ஏதோ மந்திரச் சொல் கூற அவளும் தியானிக்கத் தொடங்கினாள். ஆனால், அய்யோ, சிந்தனையை ஒருமுகப்படுத்த முடியவில்லை. அங்குமிங்குமாகச் சிதறிப்போன நினைவுகளைச் சேர்த்துப் பிடித்து மையப்படுத்த முனைகையில், யாரது புத்த துறவிகளுக்கு நடுவில் வெளிறிப்போன ஜீன்சும் நீல நிற டீ ஷர்ட்டும், சுத்தமாக மீசை தாடி மழிக்கப்பட்டிருந்த எழுதப்படாத ரோஜா நிற ஸ்லேட்டு போல முகமுமாக உயரமான அந்த இளைஞன் யார்? அவன் தலைக்கு மேலே பெயர்ப் பலகையொன்று தெரிந்தது.
“இது என்ன ஊர்?” திறந்துகொள்ள முடியாத கண்களுக்குள் வாசிக்க முற்பட்டாள். எழுத்துக்கள் பரிச்சயமின்றி இருந்தன. மனம் பயணப்பட்டு கம்ப்யூட்டரில் கூகுளுக்குள் சென்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் சொன்னது. ‘KYOTO’.
“கி.. யோ..ட்டோ.. கியோட்டா” மெல்ல முணுமுணுத்தாள் சங்கவை. “இது எந்த நகரம்? யார் இவன்? புலம்பிக்கொண்டிருக்கும்போதே “சங்கவை. சங்கவை” என்று குரல் கொடுத்தபடி தமிழ்ச்செல்வியும் ஈஸ்வரியும் அவள் அருகில் நின்று அவளை தட்டியெழுப்பிக்கொண்டிருப்பது புரிந்தது. கண்களைத் திறந்து திகைப்புடன் விழித்தாள். “நான் எங்கிருக்கிறேன்? பறம்பு மலையிலா? ஜப்பானிலா?”
“ம், பைத்தியக்கார ஆஸ்பத்திரியில. மூளை கீள பிசகிப் போச்சாடி?” இப்போது கனவிலிருந்து முற்றிலுமாக விடுபட்டிருந்தாள் சங்கவை. “அய்யோ ஒரு விசித்திரமான கனவு” சொல்லியபடியே எழுந்து தண்ணீர் எடுத்து மளமளவெனப் பருகி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். பிறகு, தமிழ்ச்செல்வியிடம், பறம்பு மலை பாரியுடையதுதானே?” எனக் கேட்டாள். அவள் ஒன்றும் புரியாமல் தலையசைக்க, “கியோட்டோ பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும்” என்று பரபரத்தாள்.
“நீ போய் முதல்ல மொகத்த கழுவிட்டு வா. நான் பாத்துச் சொல்றேன். ரொம்பக் குழம்பிப் போயிருக்க.” என்று கையில் லேப்டாப்பை  எடுத்துக்கொண்டு அமர்ந்தாள் ஈஸ்வரி. சற்றுத் தெளிவாக படுக்கையில் சங்கவை சாய்ந்திருக்க, அருகிலேயே தமிழ்ச்செல்வி அவளைக் கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். மளமளவென்று கியோட்டோ பற்றிய தகவல்களைக் கூறினாள் ஈஸ்வரி.
“ஜப்பானில் ஆயிரம் வருடங்களுக்கு மேல் தலைநகரமாக இருந்த கியோட்டோவை, புனித நகரம் என்றே சொல்லலாம். ஏராளமான புத்த மடங்கள் அங்கிருக்கின்றன. இரண்டாம் உலகப் போரின்போது, பலத்த விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பின் இந்நகரின் மீது அணுகுண்டு வீசப்பட வேண்டாம் என்று ரூஸ்வெல்ட்டின் தலைமையில் இயங்கிய அமெரிக்க அரசு முடிவு செய்தது. இதற்குக் காரணம் ஹென்றி ஸ்டிம்சன். அவர் இரண்டாம் உலகப் போரின்போது, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தும் கூட, இந்நகரத்தின் மீது அணுகுண்டு வீசப்படக்கூடாது என்று உறுதியாக இருந்தாராம். காரணம், தனது தேனிலவுக்காக அவர் சென்ற இடம் இதே கியோட்டோ நகரம். அப்போதும், அதற்குப் பிறகு அரசு அதிகாரியாக அங்கு சென்றபோதும், ஆசியாவின் மிகப்பெரும் கலாச்சார பண்பாட்டுத் தளம் கியோட்டோ என்பதை அவர் உணர்ந்திருந்தார்.” மூச்சு விடாமல் விளக்கம் வாசித்த ஈஸ்வரி, “எதுக்காக சங்கு கியோட்டோ பத்திக் கேக்குற? ஒன்னோட ஹனிமூனுக்கு அங்க போகப் போறியா” என கண் சிமிட்டி, சிரித்தாள்.
அவளது கிண்டலை ரசிக்க மனமில்லாத சங்கவை, “நீண்ட பயணம் செய்ததுபோல் களைப்பாக இருக்கிறது. துயில்கொள்ளச் செல்கிறேன்.” என்று கண்களை மூடிக்கொண்டாள். அடுத்த கணமே தூங்கியும் போனாள். தன் தலையில் தட்டிக்கொண்ட ஈஸ்வரி, “நாம இதுவரைக்கும் கேட்காத தமிழ்ல அவ பேசுனதக் கவனிச்சியா தமிழ்?” என்றாள் குழப்பத்துடன்.
“எனக்குந்தான் புரியவில்லை” என்றாள் தமிழ்ச்செல்வி குழப்பம் நிறைந்த பார்வையை சங்கவையின் முகத்தில் பதித்தபடி.

((( அத்தியாயம் 10 முற்றும் )))

அத்தியாயம் - 9

படலைக் கதவுக்கு வெளியே நின்று அக்கா வீட்ல இருக்கீயளா என்று தயக்கமாகக் குரல் கொடுத்தான் பூத்துரை. பதிலெதுவும் வராது போகவே மருதாயிக்கா, மருதாயிக்கா என்று சற்று குரல் உயர்த்திக் கூப்பிட்டுப் பார்த்தான். அப்போதும் வீட்டிற்குள்ளிருந்து பதில் குரல் எழவில்லை. நாழி ஓடுகள் வேயப்பட்டிருந்த அந்தச் சிறிய வீட்டைச் சுற்றிப் போடப்பட்டிருந்த தென்னங்கிடுகுகள் அவனுக்கு வித்தியாசமாகத் தோன்றின. காரைவீட்டுக்கு காம்பவுண்டுச் சுவர் போல இந்த ஓட்டு வீட்டுக்கு தென்னங்கிடுகுப் பாதுகாப்பா? கொள்ளையடித்துக்கொண்டு போவதற்கு மருதாயிக்கா அப்படி என்ன பதுக்கி வைத்திருக்கிறாள்? மற்றவர்கள் வயலில் வேலை செய்து பிழைப்பவளுக்கு குவித்து வைப்பதற்கு நெல் மூட்டையும் இருக்கப்போவதில்லை. யோசித்தபடி மீண்டும் உரத்த குரலில், “ஏ மருதாயிக்கா உள்ள இருக்கீகளா?” எனக் கூப்பிட்டான். அந்த வழியாக சைக்கிளில் வந்த பரமசிவம், சைக்கிளை இவன் பக்கம் நிறுத்திவிட்டு, ஏன் அண்ணாச்சி ஊருக்கே கேக்குறாப்ல கத்தீட்டிருக்கீக என்று சிநேகத்துடன் கேட்டான்.
“ஒண்ணுமில்ல பரமு, மருதாயிக்காவ பாக்கணும்.” என்றான் தலையைச் சொறிந்துகொண்டே பூத்துரை.
அதுக்கேன் எங்க ஊரு மாப்பிள்ளை இப்படி நெளியிறீக? முத்தாலங்குறிச்சியில பொண்ணு கட்டுனவக நிமிந்து நிக்க வேண்டாமா அண்ணாச்சி? அதுவும் எங்க ராஜகனி மைனிய கட்டிக்கிட்டு...?
பூத்துரை இப்போது இன்னும் அதிகமாக நெளிந்தான்.
“மருதாயி அக்காகிட்ட ஒரு விஷயம் கேட்டுப்புட்டுப் போலாம்னு வந்தேன்.”
“தாராளமா கேளுங்க. உள்ள போய் இருக்காகளான்னு பாருங்க.”
“ரொம்ப நேரமா கூப்பிட்டுப் பாத்துட்டேன். ஒரு அசைவையும் காணோம். ஒரு வேள அக்கா தூங்கிட்டிருக்காகளோ என்னவோ.”
பரமசிவம் சிரித்துவிட்டான். “காத்துக்கு ஏதுண்ணே தூக்கம்? மருதாயி அத்த அர்த்த ராத்திரியில கூட வெருவு கணக்கா முழிச்சிக்கிட்டு வௌக்குமாரு கட்டிக்கிட்டிருக்கும். வித்தா நாலு காசு கெடைக்குமேன்னு...” பரமசிவத்தின் வார்த்தைகளில் ஆதங்கம் தெரிந்தது. பிறகு அவனே தொடர்ந்து, “தமிழ்ச்செல்வியப் படிக்க வைக்கிறதுக்கு உயிரைக் கூட விட்ரும்ணே. அதுக்குத் தூக்கமா பெருசு” என்றான். சொல்லிவிட்டு, “அத்தை, மருதாயித்த” எனக் கூப்பிட்டான். இப்போதும் பதில் ஏதும் இல்லாமல் போகவே, சைக்கிளை விட்டு இறங்கி வந்து படலைக் கதவைத் தள்ளினான். தரையில் சாப்பாடு பரிமாறலாம்போல மிக, மிக சுத்தமாக வைக்கப்பட்டிருந்த முற்றத்தையும், அதிலிருந்த ஏராளமான செடிகளையும், பூக்களையும் பார்த்ததும், அந்த ஓட்டு வீட்டைச் சுற்றி ஏன் தென்னங்கிடுகுகள் போடப்பட்டிருக்கின்றன என்று பூத்துரைக்குப் புரிந்துபோனது. முற்றத்தின் ஒரு பக்கத்தில் ஒரு நார்க் கட்டில் போடப்பட்டிருந்தது. மூலையில் தேங்காய் சிரட்டையிலிருந்த உமிச் சாம்பலில் இருந்த ஈரப்பதம் கண்டதும், அப்போதுதான் பாத்திரங்கள் தேய்க்கப்பட்டிருக்கின்றன என்பது தெரிந்தது. அதற்கேற்றாற்போல் மரப்பலகையின் மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்த இரண்டு எவர்சில்வர் கிண்ணங்களும் தட்டுக்களும் மாலை வெயிலில் பளபளத்தன. சுற்றிலும் இருந்த செடிகளில் கேந்திச் செடிகள் அதிகமாய்த் தெரிந்தன. சின்ன ஆரஞ்சுப் பந்துகள் போல் பூத்திருந்த செண்டுப் பூக்களின் மலர்ச்சியில் திருமணமான புதிதில் ராஜகனி சிரிக்கும் சிரிப்பு தெரிந்தது. அவளது சிரிப்பிலும் உதடுகளைத் திறக்காமல் அவள் காட்டும் கிறங்கடிக்கும் புன்னகையிலும் அவன் கண்ட போதையை எப்போதாவது திருவிழா சமயங்களில் பருகிய பட்டைச் சாராயத்திலும் பார்த்ததில்லை. பிச்சிக் கொடியில் பூத்துக் குலுங்கிய பிச்சிப் பூக்களின் வாசம் அவளது கூந்தலின் மணமாக மனதில் வந்து மோதியது. சாயங்காலமானால் போதும். தலையில் தேங்காய் எண்ணெயை அழுந்தத் தேய்த்து, நீண்ட கூந்தலைப் படிய வாரி, பின்னல் சடை போட்டு, குறைந்தது ஐந்து முழம் பிச்சிப் பூவையாவது அதில் தொங்கவிட்டிருப்பாள் ராஜகனி. முகத்தில் வற்றாத உற்சாகத்தையும், நடையில் சந்தோஷத் துள்ளலையும் மட்டுமே அவன் பார்த்திருக்கிறான். ஆனால் பயனற்றுப் போனதால் மறுநாள் காலையில் வாடிப்போய் உதிரும் பிச்சிப் பூக்கள் போல சில காலமாய் வாட்டமுற்றுக் காணப்படும் ராஜகனியின் முகம் நினைவுக்கு வந்து வேதனையைக் கொடுத்தது.
“என்ன அண்ணாச்சி, என்ன யோசனை?” பரமசிவம் தோள்களைப் பிடித்து உலுக்கினான்.
“ஒண்ணுமில்ல... எவ்வளவு செடிகளும் பூக்களும்பா. ரொம்ப அழகா இருக்கு பரமு!”
சிவப்பு, வெளிர் சிவப்பு, வெள்ளை நிறத்தில் மலர்ந்திருந்த ரோஜாப் பூக்களை சுட்டிக் காட்டிய பரமசிவம், “பக்கவட்டியிலிருந்து இந்தச் செடிகளை நான் தான் கொண்டாந்தேன். நாட்டு ரோஜாப் பூக்கள்னா தமிழுக்கு ரொம்ப இஷ்டம்” என்றான். பிறகு, “நெசமாவே அத்தை வீட்ல இல்ல போல. இல்லைனா இந்நேரம் வரைக்கும் உள்ள இருக்காது.” என்றான்.
அப்புறமா வரலாம் என்று பரமசிவத்துடன் வெளியில் வந்த பூத்துரையிடம், “சைக்கிள்ல ஏறுங்கண்ணாச்சி. வீட்ல கொண்டுபோய் விட்டுடறேன். இல்லன்னா எம் புருஷன நடக்க வச்சிட்டியான்னு மைனி திட்டும்.” என்று உரிமையுடன் கைகளைப் பற்றிய பரமசிவத்தின் சைக்கிளில் பூத்துரை ஏறப்போன சமயத்தில், “என்ன வந்துட்டு ஒடனே கிளம்பிட்டீய? அதான் நான் வந்துட்டேனேய்யா” என்ற மருதாயின் குரல் கேட்டு நின்றார்கள். ஓட்டமும் நடையுமாக ஒரு கையில் ஆட்டுக் குட்டியைக் கட்டியிருந்த கயிற்றைப் பிடித்துக்கொண்டு, மறு கையில் குழையுமாக வந்த மருதாயி, காப்பித் தண்ணி குடிச்சிட்டுப் போகலாம் வாங்க” என்றாள். அவள் குரலில் இருந்த பாசம் கண்களிலும் தெரிந்தது. பாசாங்கு இல்லாத பாசம் அது. அதே பாசத்தை எல்லாரிடமும் எல்லா சமயத்திலும் இயல்பாக அவள் காட்ட முடிவதை பரமசிவம் கவனித்திருக்கிறான். “பூத்துரை அண்ணாச்சிதான் ஒங்களப் பாக்கணும்னு வந்துருக்காக அத்த!”
“அதனால நீ வரமாட்டியாக்கும் பரமு! நீ நட்டுவச்ச ரோசாச் செடி எம்புட்டுப் பூ பூத்திருக்கு பாத்தியா?” என அவன் கைகளைப் பற்றி அழைத்தாள். அந்த ரோஜாப் பூக்களிடம் கூட இல்லாத அழகு உழைப்பில் களைத்துப்போன அவளது கண்களில் வழியும் கனிவில் இருப்பதாகப் பட்டது பரமசிவத்துக்கு.
“ஆமா அத்த பாத்தேன். நாட்டு ரோஜாப்பூ வாசம் ஊரையே தூக்கிட்டுப் போகுது.”
“வெள்ளாட்டுக் கெடாவயும் வளக்குறியாக்கா! எப்படி? செடி கொடி காவலுக்காக சுத்திலும் கிடுக போட்டுட்டு ஆடு வளர்த்தா எப்படிக்கா” என்றான் பூத்துரை.
ஆட்டுக்குட்டியின் முதுகைப் பரிவுடன் தடவிக் கொடுத்த மருதாயி, “ஆண்டிப்பட்டி சந்தையில செண்டு ஆசைபட்டு வாங்கினது.” என்றாள்.
“அத்தை அவுக மவ தமிழ்ச்செல்விய எப்பவும் செண்டுன்னுதான் கூப்பிடும்.” என்று பூத்துரையிடம் கூறிய பரமசிவம், “தமிழு ஆடுன்னா செடிய மேயாதா அத்தை.” எனச் சிரித்தான்.
“நெசந்தான் பரமு. மோந்து பாக்குறக்குக் கூட செடிகிட்ட போறதில்ல.” என வெகுளியாய் சிரித்த மருதாயி, வீட்டு முற்றத்தில் தெற்கு மூலையில் இருந்த மலை வேம்பு மரத்தில் அதைக் கட்டிவிட்டு “இதுக்குக் கொழ புடுங்கிட்டு வரலாம்னுதான் போனேன். அதுக்குள்ள கோவங்காட்டாளுக்கு தலைய நோவுதுன்னு வந்து சொன்னாக. ஒரு எட்டு போய் சுக்கு சொரசம்பண்ணி குடுத்துட்டு வர்றேன்” என்று ஆட்டின் முன் குழையைப் போட்டுவிட்டு சருவச் சட்டி நிறைய தண்ணீர் எடுத்து அதன் முன் வைத்தாள்.
மூவரும் உள்ளே சென்றதும் இரண்டு மரப்பலகைகளை எடுத்துப்போட்டு உட்காரச் சொன்னாள். பூத்துரை முதல் முறையாக வீட்டினுள் வந்திருந்ததால் சுற்றிலும் பார்வையிட்டான். சிமெண்டு தளம் போடப்பட்ட சற்று விசாலமான ஒரே அறை. மூலையில் மண்ணெண்ணெய் ஸ்டவ். பக்கத்திலேயே குறைவான பாத்திரங்கள். தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டிருந்த செம்புத் தவலைக்குப் பக்கத்திலிருந்த பித்தளைக் கும்பா புத்தம் புதிதாகப் பளபளத்தது. பூத்துரையின் பார்வை அதன் மேல் பதிந்திருப்பதைக் கண்ட மருதாயி, “கல்யாணம் கட்டிக்கிட்டு வந்தாப்ல எங்காத்தா எனக்குக் கொடுத்த சீதனம். இதுலதான் செண்டு சின்ன வயசுல பழைய கஞ்சியோட வாழைப்பழம் போட்டு பெசஞ்சு சாப்பிடுவா” என்றாள்.
“புதுசா அப்படியே கடையில வாங்கினமாதிரி இருக்குக்கா.” மருதாயி சிரித்தாள்.
“இந்த கும்பாவத்தான் தமிழு பள்ளிகூடத்துக்குக் கொண்டுவருவா அத்தை.” என்றான் பரமசிவம்.
ஓரமாக இருந்த டப்பாவைத் திறந்து நான்கைந்து முறுக்குகளை எடுத்து “அடைக்கலப் பட்டணத்திலேருந்து மைனி வந்திருந்தாக. அவுக வாங்கிட்டு வந்தது.” என்று இருவரது கையிலும் கொடுத்தாள்.
“அவுக வீட்டுக்காரரு செத்துப்போனதுலேருந்து ரொம்பத் தவங்கிட்டாகல அத்த” என்ற பரமசிவத்திடம், “ஆமா பரமு, அவுகளப் பார்த்தா மனசுக்குக் கஷ்டமா இருக்கு.” என்றாள். பிறகு, “இந்தா வந்திடுதேன்” என்று வெளியில் ஓடினாள். முறுக்கைக் கடித்த பரமசிவம், அரிசி முறுக்கு அண்ணாச்சி என்று சொல்லிவிட்டு மீண்டும் அந்த கும்பாவின் மேல் பார்வையைச் செலுத்தினான். தமிழும் அவனும் சின்ன வயதில் போட்டுக்கொண்ட சண்டை, எவ்வளவு தூரம் தமிழ் தன்மான உணர்வு கொண்டவள் என்பதை நெஞ்சில் பதிய வைத்து அவள் மேல் மதிப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்திய அந்த நிகழ்ச்சி சட்டென்று மனக்கண்ணில் தோன்றியது.
உள்ளூர் ஆரம்பப் பள்ளியில் அவர்கள் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதுதான் அந்தச் சண்டை நடந்தது. சத்துணவு சாப்பிட ஊர்ப் பிள்ளைகள் பெரும்பாலும் அலுமினியத் தட்டு எடுத்து வருவார்கள். தமிழ் மட்டும் இந்தப் பளபளக்கும் பித்தளைக் கும்பாவுடன் வருவாள். வரிசையில் உட்கார்பவள், பரிமாறுவதற்கு சத்துணவு ஆயா பக்கத்தில் வரும் வரைக்கும் அதைக் கீழே கூட வைக்காமல் மடியிலேயே வைத்திருப்பாள். உணவு சரியாகப் பரிமாறப்படுகிறதா என்று கண்காணிக்க வரும் ஹெட்மாஸ்டர் சார்வாள், “ஏ புள்ள கும்பாவைக் கீழ வை” என அதட்டினால்தான் கீழே வைப்பாள், கும்பாவுக்கும் தரைக்கும் நோகாதபடி! சாப்பாடு பரிமாறப்பட்டு சார்வாள் அந்தப் பக்கம் போனதும் கும்பாவைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்கு நடையைக் கட்டிவிடுவாள். முற்றத்தில் அமர்ந்து ஆத்தாவுக்கு ஒரு வாயாவது கொடுத்துவிட்டுதான் சாப்பிடுவாள். பரமசிவம் ஓரளவு வசதியான வீட்டுப் பையன் என்பதால் அவன் அம்மா ஒருபோதும் சத்துணவு சாப்பாடு சாப்பிட அனுமதித்ததில்லை. ஆனாலும், சாப்பாட்டை வேடிக்கை பார்த்துவிட்டுப் போவது அவன் வழக்கம். ஒரு நாள் அவள் பின்னாலேயே சென்ற பரமசிவம், “ஏ தமிழு ஒனக்கு மட்டுமென்ன தனிச் சட்டமா? நீயும் பள்ளிகோடத்துல ஒக்காந்துதானே சாப்பிடணும்” என்று வம்பிழுத்தான்.
“போடா தடியா ஒன்னோட வேலைய பாரு.”
“இன்னிக்கு ஒன்ன நான் வீட்டுக்கு உடமாட்டேன்.”
“உங்க மாமா ஊரு நாட்டாமன்னா அத ஒங்க வீட்டுக்குள்ள வச்சுக்கோ. போடா.” சொல்லிவிட்டு அவள் பாட்டுக்கு நடந்துகொண்டிருக்க, எதிர்பாராத தருணத்தில் கும்பாவைப் பிடுங்கி எறிந்தான் பரமசிவம். அதிர்ச்சியில் நிலைகுலைந்த தமிழ்ச்செல்வி, அதிலிருந்து விடுபட்டதும் ஓவெனப் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினாள். வரிசையாகப் படர்ந்திருந்த சொடக்குத் தக்காளிச் செடிகளுக்கு மத்தியில் போய் விழுந்திருந்த கும்பாவைக் கையில் எடுத்தவள், சிதறிக் கிடந்த சாம்பார் கலந்த சோற்றுப் பருக்கைகளை மண் ஊதி எடுக்க முடியுமா என்று அழுதுகொண்டே முனைந்தாள். அது முடியாது எனத் தெரிந்ததும் அங்கேயே கால்களை நீட்டி அமர்ந்து, “ஆத்தா சோத்த கொட்டிவிட்டுட்டான் தடியன்” என்று நெஞ்சில் அறைந்துகொண்டு எழவு வீட்டு ஒப்பாரி போலக் கத்தத் தொடங்கியிருந்தாள். அவ்வப்பொழுது தன் அம்மா, அப்பாவுடன் சண்டை போட்டுக்கொண்டு, “இந்த பாழாப் போன மனுஷன் கையில என்ன புடிச்சுக் கொடுத்து வாழ்க்கைய சீரழிச்சுட்டீகளே ஐயா. அண்ணன் தம்பியெல்லாம் இருந்தும், பாத்து, பாத்து பாழுங்கெணத்துல தள்ளிவிட்டுட்டீகளே ஆத்தா” என்று நடு வீட்டில் கால்களைப் பரப்பி உட்கார்ந்து தலைவிரி கோலமாக நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுவதும், அப்போது தன் தந்தை கருங்கல்லைக் கொண்டு வந்து “எதுக்குப் புள்ள கையால அடிச்சிக்கிட்டு அழுவுற, கை நோவப்போகுது. இந்தக் கல்லால அடிச்சுக்கிட்டு அழு. சட்டுனு போய் சேந்துட்டேனா நான் நிம்மதியா இருப்பேன்.” என்று சொல்வதும் நினைவுக்கு வர, அவனும் அதேபோல ஒரு கல்லைக் கொண்டு வந்து அவளிடம் நீட்டி, “இதால அடிச்சுக்க தமிழு.” என்றான். அவ்வளவுதான். அவளுக்கு ஆத்திரம் தலைக்கு மேல் ஏறியது. எழுந்த வேகத்தில் குத்தியிருந்த ஊக்கு கழன்றுகொள்ள கீழே நழுவிய சாயம் வெளுத்துப்போயிருந்த பூப்போட்ட சீட்டிப் பாவாடையை இறுகப் பற்றி அதே வேகத்தில் ஊக்கினை மாட்டிக் கொண்டவள், அவன் கையிலிருந்த கல்லைப் பிடுங்கி அவன் மேல் வீச முற்பட்டாள். அவள் முகத்திலிருந்த ஆவேசத்தைப் பார்த்துப் பயந்துபோன பரமசிவம் வரம் கொடுத்துவிட்டு கொடுத்த வரத்தை பரீட்சித்துப் பார்ப்பதற்காகத் தன் தலையிலேயே கை வைக்க வந்த அசுரனிடமிருந்து சிவபெருமான் தப்பிக்க ஓடிய அதே வேகத்துடன் ஓட்டமெடுத்தான். வழியில் ஒடமரத்துக் கிளையில் சட்டை மாட்டிக்கொண்டு கிழிந்துபோக, எதிரில் வந்த பெருமாள் சட்டையை விடுவித்ததுடன், பின்னால் ஓடிவந்த தமிழுடைய கையிலிருந்த கல்லைப் பிடுங்க முயற்சிக்கவும் அவள், “போடா கருவாயா. ஒம் மண்டைய ஒடச்சிருவேன்.” என மூச்சிறைக்க அவனைத் தாக்க முயன்றாள்.
“வேண்டாம் தமிழு” என்று பெருமாள் விலகிக் கொள்ள இன்னும் வேகமாக ஓடத் தொடங்கிய பரமசிவம், தங்கள் வீட்டு வாசலில் போய் பொத்தென்று விழுந்தான். துரத்தி வந்த தமிழ்ச்செல்வி கும்பாவைக் கீழே வைத்துவிட்டு வலது கையில் இருந்த கல்லால் அவன் தலையில் அடிக்கப் போனாள். பிறகு திடீரென்று பலம் இழந்தவள் போல் அதைக் கீழே போட்டுவிட்டு கும்பாவை எடுத்து மார்போடு அணைத்தபடி அழ ஆரம்பித்தாள்.
“நீ நாசமா போயிருவ. வௌங்கவே மாட்ட, சோத்துல மண்ணள்ளிப் போட்டுட்டல்ல. தங்கம்மன் ஒங் கண்ண புடுங்கும். எங்க ஆத்தாவையும் என்னையும் பட்டினி போட்டுட்டல்ல” என்று ஏசத் தொடங்கினாள். சத்தம் கேட்டு வந்த பரமசிவத்தின் தாய், கல் பதித்த பொன் வளையல்கள் மினுங்கிய கைகளால் தன் மகனை அணைத்துக் கொண்டு, “ஏம்புள்ள அழுவுற? என்ன நடந்துச்சு?” என்று விசாரித்தாள். கலாட்டா ஓய்ந்திருக்குமா என்று மோப்பம் பிடிக்க வந்த பெருமாள், துணைக்கு ராசாவையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தான்.
“ஒங்க ரெண்டு பேருல யாருடா இவள அடிச்சது” என்று பரமசிவத்தின் தாய் கேட்டதும், “அய்யய்யோ நா இப்பத்தான் வர்றேன்” என்றான் ராசா அவசரமாக. தானும் அடிக்கவில்லை என தலையாட்டி மறுத்த பெருமாள், “தமிழை அழ வச்சது ஒங்க பரமசிவந்தான்” என்றான். உடனே நடந்ததை பரமு அப்படியே தன் தாயிடம் கூற, “இதுக்குத்தானா இவ்வளவு பெரிய அழிச்சாட்டியம் பண்ற தாயி? இரு வர்றேன்” என்று உள்ளே சென்றாள். வெளியில் வரும்போது ஒரு கையில் எவர்சில்வர் தட்டில் அப்போதுதான் வடித்திருந்த சம்பா அரிசிச் சோறும், இன்னொரு கையில் சிறு கிண்ணத்தில் மணக்க, மணக்க முருங்கைக்காய் சாம்பாரும் ஏந்தி வந்தாள். பொறிச்ச மொறக் கருவாடு எடுத்து வச்சிருக்கேன். போய் கொண்டா பரமு” என்று அவனைப் பணித்தாள். அவனும் ஓடிப் போய் எடுத்து வந்தான். நிறைய சின்ன வெங்காயம் போட்டு வறுத்திருந்த கருவாட்டைப் பார்த்ததும் பெருமாளுக்கும், ராசாவுக்கும் நாவில் நீர் சுரந்தது.
“இந்தா தாயி. எல்லாம் ஒனக்குத் தான். எடுத்துட்டுப்போய் ஆத்தாளோட சேர்ந்து வயிறார சாப்பிடு.” என்று எல்லாவற்றையும் அவளிடம் நீட்டினாள், பரமுவின் அம்மா. ஒரு கணம் அவள் நீட்டிய சாப்பாட்டைப் பார்த்த தமிழ்ச்செல்வியின் முகம் அவமானத்தில் சிறுத்துப் போனது. உதடுகள் துடித்தன. கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடியே, “நான் பிச்ச சாப்பாட்டுக்காக வரல” என்றாள்.
“என்ன புள்ள பெரிய பேச்செல்லாம் பேசிக்கிட்டு? இந்தா புடி. பள்ளிகொடத்துச் சாப்பாட்டை விட இது நல்லாருக்கும்.”
“அது அரசாங்கம் நாங்க படிக்கிறதுக்காக எங்களுக்குக் கொடுக்குற சாப்பாடு; பிச்சையில்ல. நீங்க போடுறது பிச்சை. எனக்கு வேண்டாம். ஒழைக்காம வாங்குற எல்லாமே பிச்சன்னு ஆத்தா சொல்லுவா. நான் போறேன்.” என்று வெற்றுக் கும்பாவை தூக்கிக் கொண்டு கை வீசி நடந்தவளைப் பார்த்து, “பெரிய மனுஷி மாதிரி பேசிட்டுப் போறா ரோஷக்காரி. புள்ளைய நல்லாத்தான் வளத்திருக்கா மருதாயி.” என்று அவன் அம்மா சிலாகித்தபோது இவனுக்கும் தமிழ் மேல் பிரமிப்பும் மதிப்பும் ஏற்பட்டது. அதன் பிறகு அவளிடம் பின்னாலேயே போய் அவன் மன்னிப்புக் கேட்டதும் அவள் போடா என்று மன்னித்து நட்பாகிப் போனதும், பிறகு அதே தமிழ்ச்செல்வி கோபமே எழாதவளாக பக்குவப்பட்டு மாறிப் போனதும் எல்லாமே நேற்று நடந்ததுபோல் தோன்றியது பரமசிவத்துக்கு. அந்த பித்தளைக் கும்பாவை கையில் எடுத்துப் பார்த்தான். அதில் மருதாயி என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. கீழே வைத்துவிட்டு பூத்துரை பக்கம் திரும்பினான். அவன் தலையில் கையை வைத்தபடி கண்களை மூடி விளங்கிக்கொள்ள முடியாத சோகம் முகத்தைக் கவ்வியிருக்க அமர்ந்திருந்தான். விஷயம் என்னவாயிருக்கும் என்று பரமசிவம் யோசித்துக்கொண்டிருந்த அதே வேளையில் உள்ளே வந்த மருதாயி, “செண்பா கடை டீ. ஏலக்கால்லாம் தட்டிப்போட்டுக் கொடுத்திருக்கா. அவ கடைய மூடுறதுக்குள்ள வாங்கணுமேன்னு ஓடிப்போய் வாங்கிட்டு வந்தேன்.” என்று செம்பிலிருந்த டீயை இரண்டு டம்ளர்களில் ஊற்றி அவர்கள் கையில் கொடுத்தாள். டீ குடித்து முடிக்கும் வரைக்கும் யாரும் எதுவும் பேசவில்லை.
“வெவரம் என்னன்னு சொல்லு பூத்துரை.” என்று மருதாயி வினவியதும் பூத்துரை சற்று தயங்குவதுபோல் தெரிந்தது.
“ஆத்தா தேடிட்டிருக்கும். நான் அப்புறமா வர்றேன் அத்தை. நீங்க பேசிட்டு வாங்க அண்ணாச்சி” என்று பரமசிவம் எழுந்து போனான்.
பூத்துரை நிமிர்ந்து பக்கத்தில் வந்தமர்ந்த மருதாயியைப் பார்த்தான். அதிகம் போனால் அவளுக்கு நாற்பது வயதிருக்கலாம். ஆனால், அறுபது வயதுக் கிழவி போல தொளதொளவென்று வெள்ளைச் சட்டையும் சுருங்கிப் போன நீலநிறச் சேலையுமாக ஒரு வயதான பெண்ணின் பாவனையை அவள் வலிந்து ஏற்படுத்த முனைந்திருப்பதுபோலத் தோன்றியது. இளமைத் தோற்றம் மாறாத முகத்தின் பொலிவும் உடம்பின் மென்மையும் வாளிப்பும் யாருடைய கண்களையும் உறுத்தாதபடி ஒரு முதிர்ந்த கோலத்தை அவள் திட்டமிட்டே உருவாக்கியிருக்கிறாளோ? சின்ன வயதில் புருஷனை இழந்ததால் யாருடைய பார்வையும் தன் மீது படர்ந்துவிடக் கூடாது என்ற அதி ஜாக்கிரதை உணர்வின் வெளிப்பாடுதான் இந்தக் கோரமோ? ராஜகனிக்கும் இந்த நிலைமை ஏற்பட்டுவிடுமோ என்று குழம்பிக்கொண்டிருந்த அவனது தோள்களில் தட்டி,
“என்ன இம்புட்டு கவலையா இருக்கீக தம்பி? நான் என்ன செய்யணும் சொல்லுங்க.” என மிகுந்த கரிசனத்துடன் கேட்டாள் மருதாயி. அவன் அப்பொழுதும் அமைதியாய் இருக்கவே, “ராஜகனி நல்லாயிருக்கால்ல. நேத்துக் கூட பாத்தேன். தூரத்தில பாத்ததுனால பேச முடியல. அவளுக்கெதுவும் பிரச்சனையா?” எனக் கேட்டாள்.
“நான்தான் பிரச்சனை.” மருதாயின் காதுகளுக்கு எட்டாமல் முணுமுணுத்தவன் தயங்கியபடி, “அக்கா ஒங்க மலவேம்பு மரத்திலேர்ந்து கொஞ்சம் கொழ பறிச்சுத் தர முடியுமா?” என்று கேட்டான். மருதாயி கலகலவென்று சிரித்தாள். அவளுக்கு வியப்பாக இருந்தது. ஆண்டிப்பட்டி ஊரிலேயே வசதியான குடும்பம் பூத்துரையுடைய குடும்பம். இரண்டு அண்ணன்களும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்துகிடந்த நிலங்களைப் பார்த்துக்கொள்ள வீட்டிலிருந்த இருநூறுக்கும் மேற்பட்ட செம்மறியாடுகளை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு பூத்துரையடையதாய் இருந்தது. ராஜகனியைத் திருமணம் செய்து கொடுத்தபோது, “மாப்பிள்ளை படிக்கல. எழுதப் படிக்கத் தெரியாது. ஆனா வசதியா இருக்காக. நம்ம பிள்ளதான் பத்தாங்கிளாஸ் வரைக்கும் படிச்சிருக்காளே. வரவு-செலவுக் கணக்கெல்லாம் பாத்துக்குவா.” என்று பெருமைபட்டுக் கொண்டார்கள் அவளது பெற்றோர்கள்.
“வசதியான வீட்டுப் புள்ள. சும்மா கெடக்கிற மலவேம்ப கேக்குறதுக்கு இவ்ளோ யோசிக்கிறீயளே? வாங்க. இப்பவே பறிச்சுக்கோங்க.” என்று எழுந்தாள் மருதாயி. அவனோ எழுந்துகொள்ளாமல், “மலைவேம்பு எல சாப்டா புள்ள பொறக்கிறதுல ஏதாவது கொறை இருந்தா தீந்திருமா” என்று மிகவும் சங்கடப்பட்டுக் கொண்டு கேட்டான். அப்போது அவளுடைய முகத்தைப் பார்க்க முடியாமல் தலையை தாழ்த்தியிருந்தான். சட்டென்று அவன் பக்கத்தில் சம்மணமிட்டு அமர்ந்த மருதாயி, “கல்யாணமாகி கொஞ்சம் வருஷம் ஆவுதேன்னு கவலப் படுதீயளா? ஒவ்வொருத்தருக்கும் கடவுள் ஒவ்வொரு மாதிரி எழுதியிருப்பாரு. ரெண்டுபேருக்கும் இன்னும் வயசிருக்கு. ஊர்க்காரவுக பேசுறாகன்னு கவலப்படாதிய. மனசப் போட்டு கொழுப்பாம சந்தோசமாயிருங்க.” என்றாள். பிறகு அவளே, “ராஜகனிக்கு ஒடம்புல எந்தக் கொறையும் இருக்காது. இந்த ஊர்ல புள்ள பெத்துக்குற ஒவ்வொரு பொம்பிளையும் பெத்துக்குறதோட சரி. அத எடுத்துக் குளிப்பாட்டி சோறு ஊட்டி தூங்க வச்சு, தோள்ல தூக்கிட்டு அலஞ்சதெல்லாம் ராஜகனி தான். புள்ளைங்கன்னா அவளுக்கு ரொம்ப இஷ்டம். அதனால கடவுள் அவளுக்குக் கண்டிப்பா இதுல கொறை வைக்கமாட்டாரு.”
“அவகிட்ட கொற இருக்குன்னு நான் சொல்லலியேக்கா. எங்க மாமியார்தான் மல வேம்புக் கொழய அரைச்சுக் குடிச்சா வயித்துல பூச்சியிருந்தா செத்துரும். புள்ள தங்கும்னு சொன்னாக. அதான் வந்தேன்.” என்றான். அவன் குரலில் தடுமாற்றத்தைவிட வேதனை அதிகம் இருப்பதாய் தோன்றியது மருதாயிக்கு.
“நாளைக்கு நானே அரைச்சு எடுத்தாரேன். கவலப்படாத பூத்துரை. எல்லாம் சரியாயிடும்.” பூத்துரை எழுந்து வெளியில் வர மருதாயி உடன் வந்தாள். பூத்துரை வானத்தை அண்ணாந்து பார்த்தான். மேகம் விலக உள்ளிருந்து பூத்த நிலவு வெள்ளை நிறக் கேந்திப் பூவாய் அவனுக்குத் தோன்றியது. மருதாயிடம் விடைபெற்றுத் திரும்பும் வழியில் தளர்ந்துபோன நடையைச் சரி செய்ய முயன்றபடி மீண்டும் வானத்தைப் பார்த்தான். நட்சத்திரக் கூட்டங்கள் எப்போதாவது ராஜகனியின் முகத்தில் திடீரெனத் தோன்றும் பருக்களை நினைவுபடுத்தின. சட்டென்று கடந்த மாதத்தில் இதேபோன்ற இரவு தொடங்கியிருந்த வேளையில் மூத்த அண்ணன் வெள்ளத்துரையின் மனைவி மல்லிகா நடுக் கூடத்தில் ராஜகனி கால்களில் விழுந்து எதையோ கெஞ்சிக் கேட்டதை தான் பார்க்க நேர்ந்ததும் அதுபற்றி அவளிடம் விசாரித்தபோது பதில் எதுவும் சொல்லாமல் அழுததும், தன்னை முத்தாலங்குறிச்சியில் கொண்டுவந்து விட்டுவிடும்படி மன்றாடியதும் நினைவுக்கு வந்தது. அதற்கெல்லாம் என்ன காரணம் என்பது அவனுக்கு இன்றுவரை விளங்கவில்லை. அன்று ராஜகனியின் காலில் விழுந்து கெஞ்சிய மல்லிகா அண்ணி அடுத்த நாளிலிருந்து தன்னிடமே, “ஒம் பொண்டாட்டிய அடக்கி வை. சீவி சிங்காரிச்சிக்கிட்டு எல்லார்கிட்டயும் பல்லிளிக்க வேண்டாம்னு சொல்லிவை.” என்று தூற்றத் தொடங்கியிருந்ததற்கும் காரணம் அவன் புத்திக்கு எட்டவில்லை.
ராஜகனி தன்னால் சந்தோஷப்பட முடியாது என்பது மட்டும் நிச்சயமாக அவனுக்குத் தெரிந்தது. எவ்வளவோ ஏமாற்றங்களுக்குப் பிறகும் ஒரு குழந்தையிடம் பரிவு காட்டுவதுபோல தன்னிடம் அன்பு செலுத்தும் அவளுக்குத் தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டான். ஆனால் என்ன செய்வது? யோசித்தபடியே மீண்டும் அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். நிலவு மேலும் பிரகாசமாய்த் தெரிந்தது.

< அத்தியாயம் 9 முற்றும் >

அத்தியாயம் - 8

நிமலோ ஃப்ரான்சிஸ் நீண்ட நேரம் ஆறடிச் சுவருக்கு வெளியே நின்றவாறு, தான் இரண்டு வருடங்கள் தங்கியிருந்த புத்த மடத்தை ஆழ்ந்த அமைதியுடன் பார்த்துக்கொண்டிருந்தான். வெளிறிய சாம்பல் சுவருக்குள்ளே நேர்த்தியாக வளர்க்கப்பட்டிருந்த பைன் மரங்கள் முதன் முதலில் அவன் அங்கு வந்தபோது இவனைக் கவர்ந்தது போலவே இப்பொழுது கம்பீரம் குலையாமல் கவனமாகச் செதுக்கப்பட்ட உயிர்ச் சிற்பங்கள் போலத் தோன்றின. தலைமைக் குருவின் உதவியாளரான கே-சான், ஒடிசலான தேகத்தைக் குறுக்கியவாறு சீனத் தளவோடுகள் பதிக்கப் பெற்ற பாதையில் நடந்து பின்புறம் இருந்த புல்வெளியின் சமீபமாய் போய்க் கொண்டிருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு, அந்த நகரத்துக்குப் புதிதாக வந்தபோது, தான் தங்கியிருந்த விடுதி மேலாளரிடம் அந்த நகரத்தில் தங்கி ஸென் புத்த மதம் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புவதாகச் சொன்னதும், குள்ளமாக இருந்த அந்த மனிதர் மிகச் சிரமப்பட்டு அண்ணாந்து அவன் முகத்தைக் கேள்விகளுடன் பார்த்தார். அவனோ மீண்டும் தான் சொன்னதை வேறு வார்த்தைகளில் உறுதியாகத் தெரிவித்தபோது, “புத்த மடங்கள் இருக்கின்றன ஏராளம் இங்கு” என்று உடைந்த ஆங்கிலத்தில் பதில் சொல்லி, பிறகு இந்த மடத்திற்கு வருவதற்கு டாக்ஸியையும் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். மடத்திற்கு வெளியே நீண்ட நேரம் நின்றிருந்த போதும் உள்ளிருந்து யாரும் வருவதாகத் தெரியவில்லை. அவரைக் கடந்து சென்ற சிலரும் கூட சற்று அதிசயித்து வாயைக் கைகளால் மூடியவாறு தலைகுனிந்து சிரித்தபடி சென்றார்கள். ஐரோப்பாக் கண்டத்தைப் பொறுத்தவரை தன்னுடைய உயரம் சாதாரணமானதுதான். ஆனால், இங்கு அதே உயரம் பெரிதாகத் தோன்றி மேலும் தன்னை அந்நியப்படுத்துவதாகவும், காட்சிப் பொருளாக மாற்றியிருப்பதாகவும் எண்ணினான். கையில், கனத்த பெட்டியைக் கீழே இறக்கி வைத்துவிட்டு, மேலும் சிறிது நேரம் காத்திருந்தான். யாரும் வருவதாகத் தெரியவில்லை. உள்ளே செல்வதற்கு உபாயம் என்ன? யாரைக் கேட்க வேண்டும் எனத் தெரியாமல் சற்று மேலே நிமிர்ந்து பார்த்தபோதுதான் சுவரையொட்டி ஆலயங்களில் தொங்கவிடுவது போல மாட்டப்பட்டிருந்த அந்தப் பெரிய மணி கண்களில் தட்டுபட்டது. அந்தக் கட்டிடத்திற்கே அழகு சேர்ப்பதுபோல் இருந்த அந்த வெண்கல மணியை இழுத்து அடித்துவிடலாமா என்று எத்தனித்த போதுதான் வெளியில் சென்று திரும்பி வந்துகொண்டிருந்த இந்த கே-சான் அவசரமாக இவர் கையைப் பிடித்துத் தடுத்தார்.
“இங்கு ஏதேனும் முக்கியமான புனித சடங்குகள் நடைபெறும்போது மட்டுமே இந்த மணி ஒலிக்கப்படும்.” என்றார் உடைந்த ஆங்கிலத்தில்.
“அப்படியானால் நான் வந்திருக்கிறேன். வாசலில் நீண்ட நேரம் காத்திருக்கிறேன் என்பதை உள்ளே இருப்பவர்களுக்கு எப்படித் தெரிவிப்பது?”
“கதவு திறந்துதானே இருக்கிறது!”
அந்த ஒல்லி மனிதர் தன்னைக் கேலி செய்கிறாரோ என்று அவரது மன உணர்வுகளை முகத்தில் தேடினார் நிமலோ. ஆனால் அவர் உண்மையை உண்மையாகத்தான் சொல்கிறார் என்பதை முகம் காட்டிற்று. அந்த மனிதர் கதவில் கை வைக்க, அது திறந்துகொண்டது. அது உள்ளே பூட்டப்பட்டிருப்பதாக எண்ணி நீண்ட நேரம் காத்திருந்த தன் மடமைக்காக வெட்கப்பட்ட நிமலோ, “நான் இங்கு தங்கி புத்த மதம் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.” என்றான்.
“சரி.”
“ஐரோப்பாவிலிருந்து வந்திருக்கும் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் புத்த மதம் பற்றி ஏன் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற கேள்வி எழவில்லையா உங்களுக்கு?”
“கேள்விகளுக்குப் பதில் தேடி வந்திருக்கும் உங்களிடம் நான் ஏன் கேள்விகள் கேட்க வேண்டும்?” இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே தலைமைக் குரு வெளியில் வந்தார்.
“நான் நிமலோ ஃப்ரான்சிஸ். புத்த மதத்தைத் தெரிந்துகொள்ள வந்திருக்கிறேன்.”
தலைமைக் குரு தலையசைக்க கே-சான் உள்ளே வருமாறு சைகை செய்தார். நான்கு அடி தூரம் நடப்பதற்குள்ளாகவே அதிகமான பருமனும் நீளமும் கொண்ட பாம்பு ஒன்று அவர்களுக்கு முன்னே கடந்து சென்றது. கையிலிருந்த பெட்டியைக் கீழே நழுவவிட்ட நிமலோ அலறத் தொடங்கியதும், கே-சான் அவன் தோள்களில் கை வைத்து அழுத்தினார். ‘ஆர்ப்பாட்டம் செய்வதற்கு எதுவும் இல்லை; அமைதியாக வாருங்கள்’ என்ற செய்தி அதில் புலப்பட்டது. கதவைத் திறந்துகொண்டு, வந்த வழியே ஓடிவிடலாமா என நிமலோவுக்கு ஒரு கணம் தோன்றிற்று. ஆனால், கீழே குனிந்து பாம்பைத் தடவி, தட்டிக்கொடுத்த தலைமைக் குரு, அதனிடம் மெல்லிய குரலில் ஏதோ கூற, சட்டென்று அது மறைந்துபோனது. படபடப்பு அடங்கி சற்று சகஜ நிலைக்குத் திரும்பியிருந்த நிமலோ, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காகத் தண்ணீர் கேட்டான்.
உள்ளே அழைத்துப்போய் தண்ணீர் கொடுத்த தலைமைக் குரு, நிமலோவைப் பார்த்து புன்னகைத்தார். இன்னமும் இங்கே தங்க விருப்பம் இருக்கிறதா என்ற கேள்வி அதில் பொதிந்திருந்தது.
“நான் எந்த அறையில் தங்கிக்கொள்ள வேண்டும்?” நிமலோ கேட்டதும், கே-சான் அவனை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று “இங்கேயே தங்கிக் கொள்ளுங்கள்” என்று இயல்பாகக் கூறினார்.  அது மரச்சட்டங்களால் உருவாக்கப்பட்டிருந்த சற்று விசாலமான அறை. அருகருகாகவே அதே போன்ற அறைகளில் புத்தத் துறவிகள் தங்கியிருந்தார்கள். தனி அறை, தன்னுடைய அறை, தன் பிரத்யேகமான பொருட்களுடன் தான் மட்டுமே வசிக்கும் அறை என்று பெற்றோருகளுடைய குறிக்கீடு கூட இல்லாமல் வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட நிமலோவுக்கு இது முற்றிலும் புதிதாகவும் பெரும் சவாலாகவும் இருந்தது. ஆனாலும் நிமலோ சளைப்பதாகத் தெரியவில்லை. போகிற போக்கில் காலையில் மூன்று மணிக்குத் தியானம் செய்வதற்கு எழுப்பிவிடுவதாகத் தெரிவித்துவிட்டு சென்றார் கே-சான். அதை சரியாகக் காதில் வாங்கிக்கொள்ளாத நிமலோ, படுக்கையில் விழுந்ததும் தூக்கம் வராமல் நீண்ட நேரம் யோசித்துக்கொண்டிருந்தான். எதைத் தேடி இங்கு வந்தோம்? கடவுளைத் தேடியா? அல்லது தான் படைக்கப்பட்டதன் நோக்கம் பற்றி அறிந்துகொள்ளவா? இதை நினைக்கையில் அவனுக்கே சிரிப்பு எழுந்தது. என்ன பைத்தியக்காரத்தனம் இது? படைக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் வாழ்வில் ஏதோவொரு பொருள் இருக்கும் என்பது தெரிந்ததுதானே? இதைப் புரிந்து கொள்வதற்காக இவ்வளவு தூரம் ஏன் வரவேண்டும்? கடவுள் என்றொருவர் இருக்கிறாரா? அவரது இருத்தல் பற்றி விளங்கிக் கொள்வதற்காகவா வந்திருக்கிறோம்? நிமலோவுக்கு இந்தியாவில் சொல்லப்படும் கதைகளில் ஒன்று நினைவுக்கு வந்தது. ஆழ்ந்த தவத்திலிருந்த ஒரு குருவிடம் சென்ற இளைஞன் ஒருவன் அவரை உலுக்கி தவத்தைக் கலைத்தான்.
“ஏன் என் தவத்தைக் கலைத்தாய்?”
“நான் கடவுளை அறிந்துகொள்ள வேண்டும்.”
“உடனே அவன் கழுத்தில் ஒரு துண்டைப் போட்டு இறுக்கிய அந்தக் குரு, அவனைத் தரதரவென்று ஆற்றங்கரைக்கு இழுத்துச்சென்று ஆற்றிற்குள் அவன் தலையை அழுத்தி மூழ்கச் செய்தார். சிறிது நேரம் கழித்து உள்ளே தத்தளித்த அவனை வெளியே இழுத்தார். அவன் மொத்தமாக நிலைகுலைந்து தடுமாறியிருந்தான். இப்போது குரு கேட்டார்.
“ஆற்றில் உன்னை நான் அமிழ்த்தியபோது உனக்கு என்ன தேவைப்பட்டது?”
“அவசரமாக சுவாசிப்பதற்குக் காற்று.”
“அந்தக் கணத்தில் சுவாசிக்க காற்றுக்காக எப்படி அலைபாய்ந்தாயோ, அதேபோல கடவுளுக்காக நீ அலைபாயும் தருணத்தில் என்னை வந்து பார். இப்பொழுது நீ போகலாம்” என்றார் குரு. இந்தக் கதையை சிந்தித்த நிமலோ, அவ்வளவு அவசரமாகவா நான் கடவுளைத் தேடி வந்திருக்கிறேன்? நிச்சயமாக இல்லை. பிறகு ஏன் இந்தப் பயணம்? தாய் நாடான ஃப்ரான்ஸில் இருந்து முதலில் இங்கிலாந்துக்குச் செல்ல விரும்பிய அவன், தன் தந்தையிடம் விருப்பத்தைத் தெரிவித்தபோது, எதுவும் கேட்காமல் பணத்தை எடுத்துக் கொடுத்தார். அதுவும் இரண்டு மூன்று வருடங்கள் தாராளமாக செலவழிக்கின்ற அளவுக்குப் பணம். இருபத்தி மூன்று வயதாகியிருந்த தன் மகன் ஒரு வருடமாகவே எதையோ தேடி நிலை கொள்ளாமல் தவிப்பதை அவர் அறிந்து வைத்திருந்தார். எனவே, எந்தக் கேள்வியும் அவனிடம் கேட்கவில்லை. தெரிந்து கொள்ள விரும்பியதைத் தெரிந்துகொண்டோ தெரிந்துகொள்ளாமலோ விரும்பும்போது திரும்பிவரட்டும் என்ற எண்ணம் அவருக்கு. ஆனால், ஒரேயொரு நிபந்தனை விதித்தார். இங்கிலாந்துக்குச் செல்ல விரும்பினால், ரயில் மார்க்கமாகச் செல்ல வேண்டாம் என்பதுதான் அந்த நிபந்தனை. அது புதிராகத் தோன்றினாலும் அவன் காரணம் கேட்கவில்லை. தனது தந்தை எப்போதுமே இங்கிலாந்து செல்ல விரும்பியதில்லை என்பது மட்டும் அவனுக்குத் தெரிந்திருந்தது. ஒரு முறை பிடிவாதமாக இங்கிலாந்திலிருந்த தன் தங்கையைப் பார்க்க விரும்புவதாக இவனது அம்மா தெரிவித்தபோதும் கூட, தான் வர மறுத்து அவளை மட்டும் தனியாக அனுப்பி வைத்திருந்தார். அதுவும் ரயிலில் போகிறேனே என்று பல முறை அவள் சொல்லியும், தேவையில்லையென்று விமானத்திலேயே அனுப்பி வைத்திருந்தார். அப்பாவுக்கு இங்கிலாந்தும் ஆங்கிலேயர்களும் வாழ்வில் பிடிக்காத எதிர் துருவங்களோ? ஃப்ரெஞ்சுக்காரர்கள் பலர், தங்கள் குழந்தைகளை ஆங்கிலம் கற்றுக்கொள்ள அனுமதிக்கத் தொடங்கியிருந்த அவனது பள்ளிப் பருவத்தின் போது கூட அவர் ஆரம்பத்தில் பிடிவாதமாக மறுத்திருந்தார். இந்தியாவிலிருந்து ஆங்கிலம் கற்றுக்கொடுப்பதற்காக வந்திருந்த ஃப்ரெஞ்சும் ஆங்கிலமும் தெரிந்த ஆசிரியை ஒருவர் இவர்கள் வீட்டுப் பக்கத்திலேயே தங்கியிருந்த போது, மிகவும் கெஞ்சி அனுமதி வாங்கித்தான் அந்த ஆசிரியையிடம் அவன் ஓரளவு ஆங்கிலம் பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டிருந்தான். சிந்தனைகள் தாய்நாட்டையும் வீட்டையும் சுற்றி வந்து தங்கியிருந்த நிகழ்கால புத்த மடத்துக்குத் திரும்பியபோது அயர்ந்து சோர்ந்துபோன உடம்பும், கண்களும் தூக்கத்தை இறைஞ்சின. ஆழ்ந்த தூக்கத்திற்குள் போய் ஒரு மணி நேரம் கூட ஆகியிருக்காது. மரக்கதவை யாரோ இரண்டு முறை தட்டும் சத்தம் கேட்டது. அது அந்த நிசப்தத்தில் தலைக்குள் சம்மட்டியால் அடிப்பதுபோன்ற அதிர்ச்சியை ஏற்படுத்தி அவரைக் கலங்கடித்தது. கண்களைக் கசக்கி கடிகாரத்தைப் பார்த்தபோது மணி சரியாக மூன்று ஆகியிருந்தது. ஓ தியானத்திற்காக எழுப்புவதாகச் சொல்லியிருந்தாரே. நினைக்கும்பொழுதே கண்கள் சொக்கின. அடுத்தடுத்த அறைகளில் கதவு தட்டப்படும் சத்தம்  கேட்க, உடம்பை வலிந்து சீர்ப்படுத்திக்கொண்டு எழுந்தவன், இந்த அனுபவம் தேவையா என அலுப்பாக நினைத்துக்கொண்டான். பிறகு சவால்களைத் தேடித்தானே வந்தோம் என்று வெளியில் வந்து தியானத்திற்குத் தயாரானான்.
சொல்லிக்கொடுத்தபடி பத்மாசனமிட முயன்றபோது கால்களில் வலி உயிர்போனது. சற்றுப் பின் சாய்ந்து மடக்கிய கால்களின் வலியை மண்டையில் ஏற்றிக்கொள்ளாமல் தன்னை சமன் செய்து கொள்ளப் பார்த்துத் தடுமாறினான்.  அந்த நேரத்தில், அதே பாம்பு தன் கால்களின் மேல் ஏறிச் செல்ல, இந்தச் சவால் சமாளிக்க முடியாதது என்ற அயர்ச்சி ஏற்பட்டது.
“இந்தப் பாம்பை அடித்துக் கொல்ல வேண்டியதுதானே.” என்று காட்டமாகவே தலைமைக் குருவிடம் கேட்டான். அவர் பதில் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தார்.
“சரி, கொல்லவேண்டாம். வெளியிலாவது அனுப்பிவிடலாமே”
இப்பொழுது தலைமைக் குரு வெகு கூர்மையாக அவன் முகத்தைப் பார்த்தபடி கூறினார்: “நீங்கள் தாராளமாகச் செல்லலாம்.”
நிமலோவுக்கு எரிச்சலாக வந்தது. சூடான தேநீர் கொண்டுவந்து கொடுத்த கே-சான், லியோ என்பவரை அப்பொழுதுதான் நிமலோவுக்கு அறிமுகப்படுத்தினார். “ஆரம்பத்தில் பத்மாசனமும் கால்களில் உயிர் போவது போல் வலியை ஏற்படுத்தும். இந்த பாம்பும் கூட...” என்று இடைவெளிவிட்ட லியோ, “இங்கே ஒரு பாம்பு இல்லை, பல பாம்புகள் இருக்கின்றன. அவை நம்மைச் சுற்றும்; நம் மேல் ஏறிச் செல்லும்; ஒருபோதும் யாரையும் கடிப்பதில்லை. நண்பர்கள் போலத்தான்.” என்றார். அவருடைய ஆங்கிலம் அவர் அமெரிக்கர் என்பதைப் புலப்படுத்தியது. ஜப்பானிய மொழியில் அல்லாமல் ஆங்கிலத்தில் பேச ஒருவர் இருக்கிறார் என்பதே நிமலோவுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது. தன்னுடைய பிரச்சனை ஏற்கனவே அவருக்குத் தெரிந்திருக்கிறது என்பதை உணர்ந்துகொண்ட நிமலோ, “பாம்பு, பார்த்தாலே அருவருப்பாக இருக்கிறது.” என்றான் முகத்தை சுளித்தபடி.
“விருப்பு, வெறுப்பு, அருவருப்பு - இவையெல்லாமே நாம் வலிந்து உருவாக்கிக்கொள்ளும் தேவையற்ற உணர்வுகள்.”
“இருக்கலாம். இனிமேல்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.”
“இது தெரிந்துகொள்வதில்லை. உணர்ந்துகொள்வது.” லியோ சொல்லிக்கொண்டிருக்கும்போதே இருவரையும் விட உயரமாக இன்னொருவர் அங்கு வந்தார். “இவர் பீட்டர். லண்டனிலிருந்து வந்திருக்கிறார். இங்கு வந்து பன்னிரெண்டு வருடங்கள் ஆகிறது.” என்று லியோ அறிமுகப்படுத்திய அந்த மனிதருக்கு நாற்பத்து நான்கு வயதிருக்கலாம் என மதிப்பிட்டான் நிமலோ. தொடக்க நாட்கள் புத்த மடத்தில் சமாளிப்பதற்கு வெகு சிரமமாகத் தோன்றினாலும், தேடலில் இருந்த விருப்பம் நிமலோவுக்குக் குறையவேயில்லை. அதனால்தான் அதிகாலை மூன்று மணிக்கு எழுந்துகொள்வதும், குறைந்தது எட்டு மணி நேரம் பத்மாசனமிட்டு தியானம் செய்வதும் போகப் போகப் பழகியிருந்தது. தன் புத்த மடத்து அனுபவங்களில் ஆட்பட்டிருந்த நிமலோ, எதிரில் ஜப்பானிய மொழியில் பேசிக்கொண்டிருந்த குரல்களால் கவரப்பட்டார். அங்கு ஜப்பானிய மொழி கற்றுக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டபோது, சூ-கி என்ற ஆசிரியையிடம் மற்றவர்களைப் போல் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருந்தான். சிநேக புன்னகையுடன் எத்தனை முறை சந்தேகம் கேட்டாலும் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் விளக்கம் கொடுத்து அந்த மொழியை அவருக்குக் கற்றுக்கொடுத்திருந்த சூ-கி, அவன் அவள் சொல்லிக் கொடுப்பதை கிரகித்துக்கொண்டு சரியாக ஜப்பானிய மொழி பேசும் ஒவ்வொரு முறையும் கைகளைத் தட்டி உற்சாகப் படுத்துவாள். அவர்தான் மற்றொரு பெண்ணுடன் பேசியபடி வந்துகொண்டிருந்தார். உடன் வருவது அவரது மகளில்லை. வேறொரு இளம் பெண். இவனைக் கடக்கையில் தலை தாழ்த்தி வணக்கம் சொல்ல, பதிலுக்கு அவளும் சொல்லிவிட்டு சிரித்தபடி சென்றாள். சூ-கியின் மகளை மடத்திற்கு வந்திருந்த ஆறேழு மாதங்கள் கழித்து முதல் முறை சந்தித்தபோது, அன்றாட தியானங்களையும், உச்சரித்த மந்திரங்களையும் தூக்கிச் சுருட்டி வீசிவிட்டு வீரியமாய் மனதை ஆட்கொண்ட சதை-தின்னும் வெறி அவனுக்குள் சட்டென்று பற்றிக்கொண்டது. உடனே அவளைத் துய்க்க வேண்டும் என்று அவனைப்போலவே இருந்த வேறொருவன் உள்ளத்துக்குள் ஓங்கி ஆர்ப்பரித்ததை நினைக்கையில் இப்போதும் அவனுக்குச் சங்கடமாக இருந்தது. ஆச்சரியமாகவும் கூட! நிச்சயமாக அந்தப் பெண் மேல் துளி கூட காதல் எழவில்லை. அதை விருப்பம் என்றுகூட சொல்ல முடியாது. ஆசைக்கும் மேலே, இச்சிக்கவேண்டும் என்ற வெறி. எழுந்த வேகத்தில் மீண்டும் கடலுக்குள் செல்லும் ராட்சத அலை போல அவன் வெறியும் கூட அடங்கிப்போனது. அதன் பிறகு அவளைச் சந்திக்க நேர்ந்த ஓரிரு சந்தர்ப்பங்களில் வெகு இயல்பாக அவளை எதிர்கொள்ள முடிந்தது. இந்த அனுபவம் அதற்கு முன் எப்போதும் அவனுக்கு ஏற்பட்டதில்லை. எந்தப் பெண்ணிடமும் இதுவரை தனக்குக் காதலும் தோன்றியதில்லை என்ற உண்மை அவனுக்கு இந்த நேரத்தில் உறைத்தது. இனிமேலும் ஏற்படுமா? தெரியாது.
ஏன் இவ்வளவு நேரம் வெளியில் நின்றுகொண்டிருக்கிறோம்? அதுவும் அங்குமிங்குமாக ஊசலாடும் நினைவுகளுடன். அந்த மடத்தில் தனது அனுபவத்தின் இறுதி நாள் அது என்பதாலா? வேறு எதாவது ஒரு நாட்டிற்குப் பயணம் செய்ய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தபோது, பீட்டரும் லியோவும், ஏன் தலைமைக் குருவும் கூட இந்தியாவுக்குச் செல்லுமாறு கூறினார்கள். இந்தியாவில் எங்கு செல்வது? என அவன் கேட்டபோது, ஜப்பானுக்கு வந்தபோது இந்த மடத்திற்கு வரவேண்டும் என திட்டமிட்டு வந்தாயா என தலைமைக் குரு கேட்டிருந்தார்.
“நிச்சயமாக இல்லை. இந்த கியோட்டோ நகரத்தில் ஏராளமான புத்த மடங்கள் இருக்கின்றன என்று கேள்விபட்டிருக்கிறேன். அதில் ஏதாவது ஒரு மடத்தில் நான் தங்கி அனுபவம் பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது.”
“இரண்டு வருட அனுபவத்துடன் இங்கு புத்த மதத்தைப் பற்றிய தெளிவு கிடைத்துவிட்டதா?”
“எதையும் தெரிந்துகொள்ளவேயில்லை. பிறகு எப்படித் தெளிவு கிடைக்கும்? நீங்கள் முதல் நாளில் சொன்ன மந்திரத்தின் பொருள் எவ்வளவு தியானித்தும் இன்று வரை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. தலைமைக் குரு வழக்கம்போல் மொளனமாய் புன்னகைத்தார். அப்போது குறுக்கிட்ட பீட்டர்,
“நான் பன்னிரெண்டு வருடங்களாக எனக்குக் கொடுக்கப்பட்ட மந்திரத்தைத் தியானித்துக் கொண்டிருக்கிறேன். இன்னமும் விளங்கிக் கொள்ளவில்லை.” என்றார். இந்த உரையாடலைச் சிந்தித்த நிமலோவுக்கு லேசாகச் சிரிப்பு வந்தது. இந்த இரண்டு வருடங்களில் ஒருமுறை கூட பொருள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று மந்திரத்தைச் சொல்லிப் பார்த்ததில்லை எனத் தோன்றியது. அதுவும் முதல் ஆறு மாதங்களில் தியானம் செய்வதாய் தூங்கியதும், கனவு கண்டதும், கனவில் புத்தர் வந்து சிரித்ததும், அவ்வப்பொழுது தூங்குபவர்களையும் கனவு காண்பவர்களையும் தலையில் குட்டி எழுப்புவதற்கென்றே நியமிக்கப்பட்டிருந்த குரு கடமை தவறாமல் அதைச் செய்தும் கூட தான் முழுமையாக தியானத்தில் ஈடுபட்டதில்லையென்று தோன்றியது. அங்கிருந்து புறப்படவேண்டுமென்ற எண்ணம் எழுந்த கடைசி வாரங்களில், தியானத்தில் முனைப்புக் காட்டினாலும், பெரிய பயன் ஒன்றும் ஏற்படவில்லை. இப்போது நூடுல்ஸ் விற்பவன் ஒருவன் வண்டியைத் தள்ளிக்கொண்டு அந்தப் பக்கமாக வந்தான். வண்டியை இவன் பக்கம் நிறுத்தியவன், “வேண்டுமா நூடுல்ஸ் உங்களுக்கு” என கஷ்டப்பட்டு ஆங்கிலத்தில் மிகப் பணிவுடன் கேட்டான். வாங்கலாமா என்ற யோசனை ஒருகணம்தான். வேண்டுமென்ற பாவனையில் தலையசைத்தான். சூடான நூடில்ஸை ஆவி பறக்க கப்பில் நிரப்பிக்கொடுத்தவன், தயக்கத்துடன் குச்சியையும் சேர்த்துக் கொடுத்தான். ஸ்பூனில் பழக்கப்பட்ட தான் இதை உபயோகிக்க முடியுமா என்று யோசிக்கிறானோ என்று யூகித்தவன், லாவகமாக குச்சியால் எடுத்துச் சாப்பிட்டான்.  சந்தோஷமாகப் பார்த்த அவனிடம் கையிலிருந்த சில்லறையை கொடுத்தபோது, நூடில்சுக்கு உரிய பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியைக் கொடுத்தான். கப்பிலிருந்து சிந்திய நூடில்ஸை தான் உண்பதற்குரிய புழு என்று நினைத்து, பாய்ந்து வந்த கோழியைக் கண்டதும் இருவருமே சிரித்து விட்டார்கள். வண்டிக்காரர் வணங்கிச் சென்றதும், அந்த கோழியைப் பார்த்தான். கொத்திக் கொத்திப் பார்த்து அது புழு இல்லை என்று தெரிந்துகொண்டு வேறு பக்கம் சென்ற கோழி இவனுடைய உள்ளத்தில் பல சிந்தனைகளைக் குப்பையைக் கிளறுவதுபோல் கிளறிவிட்டுச் சென்றது. தன் தேடலின் பதில் இங்கு கிடைக்கும் என்று வந்தவன், இல்லை என்று இந்தியா செல்கிறோமோ? இந்தக் கோழியும் தானும் ஒன்றுதானோ என எண்ணிக்கொண்டான்.
இன்னொரு புதிய நாட்டில் வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது? எப்படியிருந்தால் என்ன. எங்கிருந்தாலும் வாழ்வை சுகமாக்கிக் கொள்ளலாம் என்று எண்ணினால், நரகத்திலும் சந்தோஷமாக இருக்கலாம். ஆரம்பத்தில் தியானத்தைப் போலவே உணவுப் பழக்கமும் கூட கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால், போகப் போக ரொட்டித் துண்டிகளுடன் பரிமாறப்பட்ட செர்ரி பழ ஜாமும், பெரிய கோப்பை நிறைய தரப்பட்ட காப்பியும் விருப்பத்திற்குரியதாய் மாறிப் போனது. அடிக்கடி பக்கத்திலிருந்த முடி திருத்த நிலையம் சென்று முகத்தில் தாடி வளராதபடி சவரம் செய்துகொண்டதும் அப்போது அங்கு பணிபுரிந்த இளம்பெண்கள், கன்னத்தையும் தோள்களையும் அழுத்தி மசாஜ் செய்தபோது உற்சாகம் கொண்டதும், எல்லாமே பிடித்தவைகளாகிப் போயின. அந்தப் பெண்கள் தன்னைத் தொட்டு மசாஜ் செய்தபோதும் தனக்கு எந்த ஈர்ப்பு ஏற்படவில்லை என இப்போது தோன்றியது. அவர்களும் அழகாகத் தானே இருந்தார்கள். யாரிடமும் விருப்பமும் காதலும் அங்கும் எழவில்லை. ஒரு வேளை இது இந்தியாவில் எழுமோ எண்ணிக்கொண்டிருந்தபோதே பீட்டரும், லியோவும், கே-சானும் வந்து சேர்ந்தார்கள்.
“புறப்படத் தயாராகிவிட்டாயா?” கேட்டது பீட்டர்.
“ஆமாம்.”
“இங்கிருந்து கொண்டு செல்லும் அனுபவம் உனக்கு பயனுள்ளதாக இருக்கும்.” என்றார் லியோ.
“தெரியவில்லை. வாழ்க்கையின் மையம் துயரம் என்று சொன்ன புத்தரின் தத்துவம் எனக்கு இன்னும் பிடிபடவில்லை. அவருடைய எட்டு வழி பாதையில் பயணப்பட விருப்பம். ஆனால், அந்த எட்டு வழிகளே விளங்கிக்கொள்ள முடியாததாக இருக்கும்போது, அதை வாழ்க்கையில் கடைபிடிப்பது எப்படி? புத்தரும் புத்தரின் போதனைகளும் அழகான பாடங்கள். உண்மையை நம்மை உணர்ந்துகொள்ளச் செய்பவை என்பது மட்டும் எனக்குத் தெரியும். ஆனால் அந்த அனுபவத்தை இங்கே நான் பெற்றுக்கொள்ளவில்லை. ஒருவேளை இந்தியாவில் கிடைக்கலாம். கிடைக்காமலே போகலாம். அதைப் பற்றிக் கவலையில்லை. என் தேடல் மட்டும் தொடரும்.” என்றான் நிமலோ.
 “இந்தியாவில் யாரைப் பார்க்க வேண்டும்? எங்கு உதவி கிடைக்கும் என்ற தகவலை உனக்குச் சொல்லியிருந்தேனல்லவா” என்று பீட்டர் கேட்டதும்,
“ஆமாம், ஆனந்த் என்று ஒருவரைப் பற்றிக் கூறினீர்கள். அவருக்கு என் வருகை பற்றி தகவல் அனுப்பிவிட்டதாகவும் சொன்னீர்கள். தலைமைக் குருவை சந்தித்துவிட்டு உங்களிடம் விபரங்களை பெற்றுக் கொள்கிறேன்.” என்றான் பணிவுடன் நிமலோ.
அன்று மாலை அவன் புறப்படும்போது ஜப்பானிய மொழி ஆசிரியை சூ-கி வந்தாள், கூடவே அவள் மகளும். வாழ்த்துக்கள் என்று சூ-கி தெரிவித்தபோது, “நன்றி” என ஜப்பானிய பாஷையிலேயே இருவருக்கும் வணக்கம் தெரிவித்தான். வெளிக் கதவுக்கு வந்தபோது, தலைமை குருவுடன் முதல் நாள் பார்த்த அதே பாம்பு வந்து கொண்டிருந்தது. குனிந்து அதனைத் தடவித் தட்டிக் கொடுத்த நிமலோ, அதன் அருகே நெருக்கமாகச் சென்று ஏதோ கூறினான். தலைமைக் குருவிடம் விடைபெற்று பீட்டர், லியோவுடன் புறப்பட்டு ஒசாகா கன்சாய் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் வழியில் ஏராளமான சுங்கச் சாவடிகளைக் கடக்க வேண்டியிருந்தது. ஆனாலும், ஒன்றரை மணி நேரத்தில் போய்விடலாம் என லியோ கூற, தாமதமானாலும் பரவாயில்லை. விமனாத்தை பிடிக்க முடியவில்லை என்றால் கடல் மார்க்கமாகச் செல்ல வேண்டியதுதான்” என்றான் நிமலோ சாதாரணமாக.
“கடல் பயணம் உனக்கு ஒத்துக்கொள்ளுமா?”
“தெரியவில்லை. ஆனால் கடல் பிடிக்கும். இதுவரை கடல் பிராயணத்திற்கான சந்தர்ப்பம் வாய்க்கவில்லை” என்ற நிமலோவிடம், “வாழ்வைத் தேடிச்செல்கிறாயா?” என வினவினார் பீட்டர்.
“வாழ்வில் என்ன இருக்கிறது எனத் தெரிந்துகொள்ளச் செல்கிறாயா?” எனக் கேட்டார் லியோ.
“தெரியவில்லை.” தலையசைத்த நிமலோ, “இந்தியாவில் நான் சந்திக்க வேண்டிய ஆனந்த் உங்கள் நண்பரா?” எனக் கேட்டான்.
“இல்லை. என் நண்பருடைய நண்பர்.”
“உங்கள் நண்பர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?”
“அவரும் இங்கிலாந்துக்காரர்தான்.”
“உங்களிடம் நீண்ட நாட்களாக ஒரு விஷயம் கேட்க வேண்டுமென்று நினைத்திருந்தேன்.”
“என்ன?”
“ஃப்ரான்ஸிலிருந்து இங்கிலாந்துக்கு ரயில் மார்க்கமாக வருவதில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா?”
“அப்படி இருப்பதாகத் தெரியவில்லை.”
“என்னுடைய அப்பாவுக்கு இங்கிலாந்துக்குச் செல்வது ஒருபோதும் பிடித்தமானதாக இருந்ததில்லை. அவர் வந்ததும் இல்லை. நானும் அம்மாவும் போக வேண்டுமென்றாலும் கூட ரயில் மார்க்கமாக செல்லவே கூடாதென்று நிபந்தனையிடுவார்.”
“அது ஏன் என்று உனக்குத் தெரியவில்லையா?” பீட்டர் சற்று சப்தமாகச் சிரித்தார். பிறகு ஃப்ரான்ஸிலிருந்து இங்கிலாந்து வரும் ரயில்கள், கடைசியாக வந்து சேரும் ரயில் நிலையத்திற்கு, எங்கள் நாட்டுக்காரர்கள் வைத்திருக்கின்ற பெயர் ‘வாட்டர்லூ’. இப்பொழுது புரிந்திருக்குமே உனக்கு, உன் அப்பாவின் நிபந்தனைக்கான காரணம்...”
“மாவீரன் நெப்போலியனையும் ஃப்ரான்ஸையும் வாட்டர்லூ போரில் வெற்றி கொண்டதைக் கொண்டாடவா அந்தப் பெயர்?”
“ஆமாம்.” என்ற பீட்டர், வெற்றி மயக்கமும், தோல்வியின் கலக்கமும் மனிதர்களிடம் இயல்பாக இருக்கின்றன. தோல்வி கண்டவனை இழிவு படுத்துகிறோம் என்பதாக எண்ணிக் கொண்டு வெற்றி பெற்றவன் அந்த வெற்றியின் அடையாளமாக ஏதோ ஒரு செயலைச் செய்கிறான். அந்த மமதையைத் தாங்கிக் கொள்ள முடியாத தோல்வியுற்றவன், வெற்றி பெற்றவனையும், அவன் பெற்ற வெற்றியையும் வெறுக்கிறான். அதுபோலத்தான் இந்த வாட்டர்லூ ரயில் நிலையக் கதையும்; உன்னுடைய அப்பாவின் வெறுப்பும்... மேலும், யாரையும் நாம் மாவீரன் என்று கொண்டாட வேண்டிய அவசியமில்லை. புலனடக்கம் இல்லாதவர்களும், ஆசைகளை துறக்காதவர்களும் எப்படி மாவீரர்கள் ஆக முடியும்?” என்றார்.
“நீங்கள் சொல்வது சரிதான்.”

விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்ததும், பீட்டரிடமும் லியோவிடமும் நன்றி சொல்லி விடைபெற்ற நிமலோ, விமானத்திற்குள் ஏறியதும் சற்று நேரம் கண்களை மூடியிருந்தான். விமானம் புறப்பட்டு ஒசாகா புள்ளியாய்த் தெரிய ஆரம்பித்த சிறிது நேரத்திற்கொல்லாம் “பருகுவதற்கு என்ன வேண்டும்?” என அருகில் வந்து பெரிய புன்னகையுடன் விசாரித்த விமான பணிப் பெண்ணிடம், “குளிர்ச்சியாக இரண்டு பியர் பாட்டில் வேண்டும்” எனச் சொல்லிவிட்டுக் காத்திருந்தான்.