Wednesday, July 29, 2015

சங்கவைக்குப் பரிசு!

கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் நடத்தும் திருமதி ரங்கம்மாள் தமிழ் நாவல் பரிசுப் போட்டியில் பரிசுக்குரிய நாவலாக சங்கவை தேர்வு. ரூ.30,000 பரிசுத்தொகை.


கோயம்புத்தூரில் இயங்கி வரும் கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறந்த நாவலுக்கான பரிசுப் போட்டியினை நடத்துகிறது. 2013 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் வெளிவந்த நாவல்களுக்கான போட்டியில் சங்கவை பரிசுக்குரிய நாவலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான அதிகாரபூர்வமான கடிதம் 25.7.2015 அன்று கிடைக்கப்பெற்றது. போட்டிக்கு 23 நாவல்கள் வந்திருந்ததாகவும், அதில் சங்கவை நடுவர் குழுவால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

போட்டி விதிமுறைப்படி நாவலை எழுதியவர் என்ற முறையில் எனக்கு பரிசுத் தொகை ரூ.30,000/-ம், நாவலை வெளியிட்ட விருட்சம் பதிப்பகத்தாருக்கு ரூ.7,500/-ம் வழங்கப்படுகிறது.



கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்து அனுப்பப்பட்டிருந்த கடிதத்தைக் கண்டதும், தொடர்புகொள்வதற்காகக் கடிதத்தில் கொடுக்கப்பட்டிருந்த திரு.M.குப்புராஜ், மேலாளர் அவர்களை கைபேசி எண்ணில் அழைத்து நன்றி தெரிவித்தபோது ஒரு சுவையான, மகிழ்ச்சியான தகவல் எனக்கு கிடைத்தது.

1985-ஆம் ஆண்டு இதே போட்டியில் எழுத்தாளர் சிவசங்கரி, தமது பாலங்கள் என்ற நாவலுக்காகப் பரிசு பெற்றதாகவும், அதன் பிறகு, அதே பரிசினைப் பெறும் இரண்டாவது பெண் எழுத்தாளர் நான் என்பதும் தெரிய வந்தது. இப்போட்டியில் ஏற்கனவே பரிசு பெற்ற வேறு சில முக்கியமான எழுத்தாளர்கள் - திரு.ர.சு.நல்லபெருமாள், திரு.இந்திரா பார்த்தசாரதி, திரு.நீல பத்மநாபன், திரு.நாஞ்சில்நாடன், திரு.பிரபஞ்சன், திரு.சுப்ரபாரதிமணியன் போன்றவர்கள் ஆவர்.

கடந்த 2013-ஆம் ஆண்டு, கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் திருமதி ரங்கம்மாள் நினைவு நாவல் பரிசுப் போட்டியில், எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் ஆளண்டாப்பட்சி (காலச்சுவடு பதிப்பகம்) நாவல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகள் பாரம்பரியமும் சிறப்பும் மிக்க இப்பரிசு சங்கவை நாவலுக்காக எனக்குக் கிடைத்ததற்கு கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளைக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாவலை வெளிக்கொணர்வதில் உதவியாக இருந்த சாம்சன் துரை, அஸ்வின், பிரகாஷ் சுப்பிரமணி, சுரேஷ், அம்மா, சகோதர, சகோதரிகள் மற்றும் நட்பு வட்டங்கள் கிளாரம்மா ஜோஸ், கமலவேணி, ஜெனோ லோகநாதன் மற்றும் மாணவ சமூகம் - அனைவருக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.

பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இப்போட்டியைப் பற்றியும், அதன் சிறப்பு பற்றியும் நான் அறிந்திருந்தாலும், இந்த ஆண்டிற்சான போட்டி பற்றிய அறிவிப்பினைக் கவனிக்காமல் தவறவிட்டிருந்தேன். இறுதி நாளுக்குச் சரியாக மூன்று தினங்களுக்கு முன்பாக இதுபற்றி எனக்குத் தெரிவித்து, உடனே என்னுடைய நாவல் சங்கவையினை அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்திய பேராசிரியை எம்.ஏ.சுசீலா அவர்கள் என் நன்றிக்குரியவர்கள்.

கடைசி நேரத்தில் அதை அனுப்பி வைப்பதற்காக சிரத்தை எடுத்துச் செயலாற்றிய சூரியபிரகாஷுக்கும் நன்றி.

பரிசு பற்றிய விவரத்தைத் தாங்கி வந்த கஸ்தூரி சீனிவாசன் அறநிலையத்தினரின் அதிகார பூர்வ கடிதத்தை இங்கு இணைத்துள்ளேன்.

Tuesday, May 20, 2014

அத்தியாயம் - 10

செம்பஞ்சுக் குழம்பு பூசியிருந்த பாதங்களில் தகதகத்த தங்கச் சிலம்புகள், முத்தும் மாணிக்கமும் பதிக்கப்பட்டிருத்ததால் கண்களைக் கூசும் அளவிற்கு ஒளி வீச, சகோதரிகள் இருவரும் மயிலுக்கு நடை கற்பிப்பதுபோல ஒயிலாக நடந்து சென்றார்கள். அவர்கள் உடுத்தியிருந்த பட்டாடை, உள்ளங்கையில் மடித்து வைத்துக்கொள்ளும் அளவிற்கு மெல்லியதாக இருந்தது. சுனை அருகே வந்ததும் தெளிந்த நீரைப் பார்த்து மகிழ்ச்சி மேலிட்டது. கைகளால் அள்ளியெடுத்தார்கள். மார்கழி மாதத்துக் குளிர்ச்சியைவிட, அதிகமாகக் குளிர்ந்திருந்த நீரைப் பருகியதும் தேனும் பாலும் கலந்த சுவையில் சிலிர்த்துப்போனார்கள். பின்னால் வந்த தோழிப் பெண்கள் செய்தி ஒன்று சொல்ல விரும்புவதுபோல தயக்கத்துடன் இவர்களை ஏறிட்டார்கள்.
“ஏதோ சொல்ல விரும்புகிறீர்கள் போல் தெரிகிறது. தயங்காமல் சொல்லுங்கள்.” என்றாள் மூத்தவள்.
தோழியரில் துடுக்கான ஒருத்தி, “இன்று பாண்டிய மன்னர் உங்கள் இருவரையும் பெண்கேட்டு வருகிறாராம். அதற்காக, கொற்கையில் விளைந்த முத்துக்கள் அனைத்தையும் பரிசாகக் கொண்டு வருகிறாராம். சகோதரிகள் இருவரும் இதைக் கேட்டதும் நகைத்தார்கள். சிலம்புகளிலிருந்த முத்துப் பரல்களும் மாணிக்கக் கற்களும் சிதறிவிட்டனவோ என சுற்றும் முற்றும் பார்த்தார்கள் தோழிப் பெண்கள். தந்தை என்ன சொல்வார் என எதிர்பார்க்கிறாய் சகோதரி?” இளையவள் கேட்க, “பாண்டிய மன்னனுக்குப் பதிலைத் தானே கேட்கிறாய்?” என்றாள் பெரியவள்.
“ஆமாம்.”
“நீ கொண்டுவந்திருக்கும் முத்துக்கள் எம் பெண்களுக்கு நீ பேசும் விலையா? அவை அவர்களின் ஒரு சிறிய புன்னகைக்குக் கூட ஈடாகாது எனச் சொல்லி அனுப்பி விடுவார்.”
“இவ்வளவு தூரம் தந்தை அவனிடம் பேசுவார் என்று நினைக்கிறாயா? கடந்த திங்கள் சோழன் வந்தபோது, பேசவே மறுத்ததாக அல்லவா கேள்விப்பட்டோம். தந்தை என்ன செய்வார் என்று யார்தான் முன்னுணர முடியும்? நிமித்தங்கள் கூட அவரிடம் பொய்த்துப் போகின்றனவே.”
“சகுனங்களை மட்டும் ஏன் விட்டுவிட்டாய் சகோதரி? அதோ தெரிகிறதே உன்ன மரம். கடந்த முறை அவர் போருக்குச் சென்றபோது அந்த மரம் கருகியிருந்தது. இப்போதுபோல் செழிப்பாக இருக்கவில்லை. ஆனாலும் தந்தை மிகப் பெரிய வெற்றியுடனல்லவா திரும்பி வந்தார்.”
“உன் கூற்று உண்மைதான். சேர மன்னனைப் பாராட்டிப் பாடல் இயற்றிய குறிஞ்சித் திணைப் புலவரும் ‘உன்னத்துப் பகைவன்’ என நம் தந்தையைப் பாடியிருக்கிறார்.”
“இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. தந்தையிடம் கேட்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். இரட்டைப் புலவர்கள் ஏன் நீண்ட நாட்களாக வரவில்லை?”
“மயிலுக்குப் போர்வை தந்தவன் தன் வீட்டு மயிலை அலைக்கழித்து அழ வைத்திருக்கிறானாம்.”
“நல்லூர்க்காரிதான் காரணமோ?”
“அப்படித்தான் சொல்கிறார்கள்.” இருவருக்கும் சந்து செய்விக்கப் போய்விட்டார்கள் போல் தெரிகிறது. ‘உன் மலைகளைப் பாடலாம் என்று வந்தேன் மன்னா! ஆனால் தலைவிரி கோலமாக ஒரு பெண் அழுது கொண்டிருப்பதைக் கண்டேன். எப்படிப் பாடுவது? குளிருக்காக நடுங்கிய காட்டு மயிலுக்குப் போர்வை தந்தவன், வீட்டு மயிலைப் புறக்கணித்து அழ வைப்பது சரியில்லையே. நீ எங்களுக்குப் பரிசில் தர வேண்டாம். அவள் மேல் உன் காதலைப் பொழிந்து மகிழச்செய் என்று அவனுக்கு நியாயம் உணர்த்தப் போயிருப்பார்கள்.”
இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் புள்ளிமான் ஒன்று சுனையருகே நீர் பருக வந்தது. இவர்களைக் கண்டதும் துள்ளிக் குதித்து ஓடி சற்று தூரத்தில் போய் நின்றது. கண்களில் தெரிந்த மருட்சியைக் கண்டதும், சிரித்தாள் மூத்தவள். “நாம் என்ன மருண்டு போயா வாழ்கிறோம்? மான் விழி என்று எதற்காக இந்தப் புலவர்கள் அழைக்கிறார்கள்?” என வினவினாள்.
“அதிசய நெல்லிக் கனி கிடைக்கப்பெற்ற அப்பாவின் தோழி வரட்டும். அறிவிற் சிறந்த அவளிடமே கேட்டுத் தெரிந்துகொள்வோம்.”
“எனக்கு ஒரு ஐயம். யாரிடம் கேட்பதென்று தெரியவில்லை.”
“என்னிடமே கேட்கலாமே?”
“பாடல் புனைவதில் ஆற்றல் மிக்கவர்களாகயிருக்கும் சான்றோராகிய பெண்கள் வாழ்வில் துயர் கொண்டு அலைவதுபோல் தெரிகிறதே?”
“யாரைச் சொல்கிறாய்? எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே என்று தமிழைத் தலை நிமிர வைத்த புலவரைச் சொல்கிறாயா? அவர் மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறார்?”
கன்றும் பருகாமல் கலத்தினும் படாமல் நிலத்தில் விழுந்து பாழாய்ப் போகும் பால் போலத் தன் பெண்மையும் அழகும் வீணாகப் போவதாய்த் தவித்துப் பாடும் புலவரும் காதல் தோல்வியில் கவலையில் தோய்ந்து துயர் கொண்டு அலைகிறாரே! அந்தத் துயரத்தை, பறவைகளின் பாதுகாவலன் கொடுத்த நெல்லிக்கனியை உண்ட அப்பாவின் தோழியும் தன் பாடலில் பதிவு செய்திருக்கிறாரே?
“வௌவ்வால்கள் விரும்பும் புளிப்பு கலந்த நெல்லிக்கனி பற்றிப் பாடிய புலவரின் வாழ்க்கையும் கூட துக்கத்தில்தானே போய்க்கொண்டிருக்கிறது!”
“யாரைச் சொல்கிறாய்?”
“யானைத் தந்தங்கள் போல தாழம்பூக்கள் மலர்கின்றன என உவமையில் அழகு படைத்த புலவரைத்தான் சொல்கிறேன்.”
“அவர் மன்னரையல்லவா காதலித்தார்?”
“நாடாளும் மன்னரையல்லவே. தந்தையிடமிருந்து பிரிந்து சென்று புல்லரிசிக் கூழுண்டு சாதாரண மனிதராய் காடெல்லாம் அலைந்தவரையல்லவா அவர் காதலித்தார். காயம் பட்டு வெற்றிக் களத்தில் வீழ்ந்துகிடந்த அவரை, பனை மரத்தைப் பற்றியபடி பார்த்துக்கொண்டிருந்த கவியரசி, தன் உள்ளங்கவர்ந்தவரின் உடலைத் தழுவிக்கொள்ள விரும்பினாலும், ஊர் என்ன சொல்லுமோ என ஒதுங்கி நின்று வெதும்பிய வேதனையை அவர் பாடலில் வடித்திருக்கிறாரே!”
“ஒரேயொரு பாடலில் தண்ணீர் இருக்கும் திசையெல்லாம் காதலனைத் தேடிப் பேதுற்றலைந்த பெண்ணரசியின் கதையும் சோகம் தானே!”
இப்போது கலைமான் ஒன்று தூரத்தில் மருண்டு நின்ற பிணை மான் பக்கத்தில் போய் நின்றது. இரண்டும் சேர்ந்து நிற்கும் அழகையும் பார்த்த சகோதரிகள் நமக்கு அஞ்சி தண்ணீர் பருகாமல் விலகி நிற்கின்றன. புறப்படுவோம். பாவம், பாலை நிலத்தில்தான் கலங்கியிருக்கும் கையளவு நீரை, பிணை மான் பருகட்டும் என்று கலைமானும், கலைமான் மாந்தட்டும் என்று பிணைமானும் விட்டுக்கொடுத்து தாகம் தீர்க்காமல் போகின்றன நம் பறம்பு மலையில் நீர் வளம் கடலை விடப் பெரியதும், தேனைவிடச் சுவையானதும் அல்லவா.
அவர்கள் புறப்பட்டுச் செல்லும் தருவாயில் அருகில் ஓடிவந்த மான்கள், கால்களுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு நட்புடன் பார்த்தன. “நாம் பேசுவது, பார்ப்பது எல்லாமே இவைகளுக்குப் புரியும்… ஏன் இங்கிருக்கும் சிறு கொடிகளுக்கும் பெரிய மரங்களுக்கும் கூட விளங்கும். நம் ஒவ்வொரு அசைவும் அவற்றைப் பாதிக்கவும் செய்யும்” என்றாள் மூத்தவள். இளையவள் ஆமோதித்தாள்.
பால் நிலவு அமுதத்தைப் பொழிந்துகொண்டிருக்க, அந்த நிலவொளியில் உப்பு மூட்டைகள் ஏற்றப்பட்ட வண்டிகள் செல்வதை, தந்தையின் பக்கத்தில் அமர்ந்து ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த சகோதரிகள், விவரிக்க இயலாத உணர்வில் ஆழ்ந்திருந்தார்கள். “தந்தையே இந்த உலகத்திலேயே நீங்கள்தான் நல்லவர், வல்லவரும் கூட” என்றாள் மூத்தவள். “ஆமாம் உங்களுக்கு இணை யாருமே இல்லை.” என்றாள் இளைவள்.
“என் மகள்களுக்குத்தான் இணை உலகத்தில் எவரும் இல்லை. அதனால்தான் எந்த அரசர் பெண் கேட்டு வந்தாலும் எனக்கு மனம் ஒப்பவில்லை.”
“ஆழிசூழ் உலகில் யாருமே உங்களை வெல்ல முடியாதல்லவா?” இளையவள் கேள்வியில் பெருமை பொங்கித் ததும்பியது. தன் இரு பெண்களின் முகத்திலும் நிலவொளியில் மின்னிய கர்வம் அவர்கள் முகத்திற்கு மேலும் அழகு சேர்ப்பதாய் அந்தத் தந்தைக்குத் தோன்றியது. “இல்லை; என்னையும் தோற்கடிக்க சிலர் இருக்கிறார்கள். அவர்கள் கேட்டால் உயிரையும் தருவேன்.”
“யார் அவர்கள்? புலவர்களா? தன்னுடைய காவல் மாமரத்திலிருந்து கனிந்து, தண்ணீரில் விழுந்து மிதந்துவந்த மாங்கனியை எடுத்துவிட்டாள் என்பதற்காக, பெண் கொலை புரிந்த மன்னனைக் கூட போற்றிப் பாடுபவர்கள் அல்லவா புலவர்கள்?”
“அவர்கள் என் மரியாதைக்குரியவர்கள். அவர்கள் புலமைக்கும் தமிழுக்கும் நான் என்றென்றும் தலை வணங்குகிறேன்.”
“வேறு யார்? எங்கள் தாயும் இப்போது உயிரோடில்லையே?”
“என் ஆவி நிகர்த்த அந்த அன்னத்தைப் பிரிந்த பின்னும் நான் உயிரோடிருக்கிறேன் என்றால், ஒரு காரணம் நீங்கள். மற்றொன்று...” என நிறுத்தினார் தந்தை.
“அதைத்தான் யாரெனக் கேட்கிறோம்.” ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் காதளவோடியிருந்த கயல் விழிகளால் கெஞ்சுவது போல தந்தையிடம் வினவினார்கள்.
“வேறு யார்? கூத்தரும், பாணன்-பாடினிகளும்தான். அவர்களின் பாடலுக்கும் கலைக்கும் என் உயிரைவிடப் பெரிதாக வேறென்ன பரிசு தர முடியும்?” முல்லைக் கொடிக்குத் தேரைக் கொடுத்தவன் கண்கள் பனிக்கச் சொன்னபோது அவன் பெண்களின் விழிகளிலும் நீர் முத்துக்கள் கோர்த்து நின்றன.
அதே நிலவு, அது பொழிவது அமுதமாய் இருந்தாலும் சகோதரிகளின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. “நிலவே, அப்போதும் நீ காய்ந்தாய். குளிர்ச்சியாய். அருகில் எங்கள் தந்தை இருந்தார். பறம்பு மலை எங்களுக்குச் சொந்தமாய் இருந்தது. உப்பு வண்டிகள் வரிசையாய்ச் சென்றன. எங்கள் தந்தையின் பக்கத்தில் அமர்ந்து உன்னையும் உன் தண்ணொளியில் உப்பு வண்டிகளையும் பார்த்து மகிழ்ந்திருந்தோம். இப்போது நீயும் இருக்கிறாய், உப்பு வண்டிகளும் வரிசையாய்ச் செல்கின்றன. எங்களுக்குச் சொந்தமாயிருந்த பறம்பு மலையும் எங்களை விட்டுப் போய்விட்டது. உயிராக இருந்த தந்தையும் கூட எங்களோடு இல்லை.” முகத்தை நீண்ட காந்தள் விரல்களால் மூடிக்கொண்டு முலைகள் நனைக்க அழுதார்கள் சகோதரிகள் இருவரும்.
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த சங்கவையும் வாய்விட்டு அரற்றினாள்.
“அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
எந்தையும் உடையோம் எம்குன்றும் பிறர் கொள்ளார்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்
வென்று எறிமுரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே...” சொல்லிவிட்டு அழுதாள்.
அறிவில் சிறந்த தோழியும் அந்தண நண்பனும் ஊர், ஊராக அழைத்துச் சென்றார்கள். என் பெண்களை மணம் செய்துகொள்ள உலகிலேயே எவரும் இல்லை என்று தந்தை இறுமாந்திருந்த காலம் போய், இப்பெண்களா? எங்களுக்கு வேண்டாம் என்று சென்ற இடமெல்லாம் சீந்துவாரின்றிப் போனார்கள். சங்கவை விசும்பி, விசும்பி ஓய்ந்து போனாள். குன்றும் மலையும், அவரைக்கொடியும், கோடல், கொன்றை, முல்லை மலர்களும் மறைந்து போக, விளக்குகள் பளீரென கண்ணுக்குள் அடித்தன. இவை என்ன உயர்ந்த கட்டிடங்கள்? மாடங்களும் மாளிகைகளும்போல் தெரியவில்லையே! யோசித்துக் கொண்டிருக்கும்போதே, தலையை மொட்டையடித்து, காவி உடுத்தி கையில் ஏதோ மணிகளை உருட்டியபடி மந்திரத்தை முணுமுணுத்த வாயுடன் புத்தத் துறவிகள் வரிசையாக நின்றிருந்த பைன் மரங்களைக் கடந்து நடந்து வந்து கொண்டிருந்தார்கள். சங்கவையின் கண்களுக்குள் உணர்வுகள் குழப்பத்தில் சிறகடித்தன. இமைகளைப் பிரித்து இதென்ன காட்சியென்று விளங்கிக்கொள்ள ஆழ்மனம் கட்டளையிட்டும், அவள் பகீரதப் பிரயத்தனம் செய்து பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. துறவிகளின் முகத்தில் நிரம்பியிருந்த தேஜஸ் அவளை ஆட்கொண்டு காந்தமென அந்த மடத்திற்கு வரும்படி அழைத்தது.
“நான் மன்னனின் மகள். எனக்காகவும் என் சகோதரிக்காகவும் தந்தையின் உற்ற நண்பர் குறிஞ்சி பாடிய அந்தணரும், எங்கள் தந்தையின் தோழியும் ‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை, வாழிய நிலனே’ என்று உலகம் உய்வதற்கு வழி சொன்னவருமான கவிப்பேரரசியும் மணமகன் தேடிக்கொண்டிருக்கிறார்கள். நான் எப்படி அங்கே வர முடியும்? இந்த இடம் எனக்குப் புதிதாகவும் புதிராகவும் இருக்கிறது. வேங்கைப் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் மலைகளும் பனிச்சுனைகளும், நெய்தல் நிலத்துத் தாழைகளும் அங்கு நின்றிருந்த நாரைகளும் எங்கே போயின? சங்கவை நெஞ்சுக்குள் கதறி அழுதாள். “பெண்ணே, நீ இங்கே இருக்க வேண்டியவள். நீ சொல்கிறாயே... அந்த அறிவு சார்ந்த பெண்.” அவருடைய அந்தப் பாடல் கருத்து கூட புத்தரின் தம்ம பதத்திலிருந்து எடுக்கப்பட்டதுதான் பெண்ணே. தலையை மழித்து இதோ காவி ஆடை கட்டிக்கொள்.” என்றார்கள் அந்தப் புத்தத் துறவிகள்.
“இவை மாபெரும் பத்தினி மகளுக்குரியவை அல்லவா? அவள் கையிலிருந்த அமுத சுரபிதானா உங்கள் கையிலிருக்கும் கமண்டலம்?”
“பழம்பிறப்புக்கள் குறித்துப் பேசிக்கொண்டிராதே மகளே!” மனதை ஒருமுகப்படுத்து. இதோ உனக்குரிய மந்திரம். தலைமைக் குரு போல தோன்றிய துறவி அவள் காதுகளில் ஏதோ மந்திரச் சொல் கூற அவளும் தியானிக்கத் தொடங்கினாள். ஆனால், அய்யோ, சிந்தனையை ஒருமுகப்படுத்த முடியவில்லை. அங்குமிங்குமாகச் சிதறிப்போன நினைவுகளைச் சேர்த்துப் பிடித்து மையப்படுத்த முனைகையில், யாரது புத்த துறவிகளுக்கு நடுவில் வெளிறிப்போன ஜீன்சும் நீல நிற டீ ஷர்ட்டும், சுத்தமாக மீசை தாடி மழிக்கப்பட்டிருந்த எழுதப்படாத ரோஜா நிற ஸ்லேட்டு போல முகமுமாக உயரமான அந்த இளைஞன் யார்? அவன் தலைக்கு மேலே பெயர்ப் பலகையொன்று தெரிந்தது.
“இது என்ன ஊர்?” திறந்துகொள்ள முடியாத கண்களுக்குள் வாசிக்க முற்பட்டாள். எழுத்துக்கள் பரிச்சயமின்றி இருந்தன. மனம் பயணப்பட்டு கம்ப்யூட்டரில் கூகுளுக்குள் சென்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் சொன்னது. ‘KYOTO’.
“கி.. யோ..ட்டோ.. கியோட்டா” மெல்ல முணுமுணுத்தாள் சங்கவை. “இது எந்த நகரம்? யார் இவன்? புலம்பிக்கொண்டிருக்கும்போதே “சங்கவை. சங்கவை” என்று குரல் கொடுத்தபடி தமிழ்ச்செல்வியும் ஈஸ்வரியும் அவள் அருகில் நின்று அவளை தட்டியெழுப்பிக்கொண்டிருப்பது புரிந்தது. கண்களைத் திறந்து திகைப்புடன் விழித்தாள். “நான் எங்கிருக்கிறேன்? பறம்பு மலையிலா? ஜப்பானிலா?”
“ம், பைத்தியக்கார ஆஸ்பத்திரியில. மூளை கீள பிசகிப் போச்சாடி?” இப்போது கனவிலிருந்து முற்றிலுமாக விடுபட்டிருந்தாள் சங்கவை. “அய்யோ ஒரு விசித்திரமான கனவு” சொல்லியபடியே எழுந்து தண்ணீர் எடுத்து மளமளவெனப் பருகி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். பிறகு, தமிழ்ச்செல்வியிடம், பறம்பு மலை பாரியுடையதுதானே?” எனக் கேட்டாள். அவள் ஒன்றும் புரியாமல் தலையசைக்க, “கியோட்டோ பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும்” என்று பரபரத்தாள்.
“நீ போய் முதல்ல மொகத்த கழுவிட்டு வா. நான் பாத்துச் சொல்றேன். ரொம்பக் குழம்பிப் போயிருக்க.” என்று கையில் லேப்டாப்பை  எடுத்துக்கொண்டு அமர்ந்தாள் ஈஸ்வரி. சற்றுத் தெளிவாக படுக்கையில் சங்கவை சாய்ந்திருக்க, அருகிலேயே தமிழ்ச்செல்வி அவளைக் கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். மளமளவென்று கியோட்டோ பற்றிய தகவல்களைக் கூறினாள் ஈஸ்வரி.
“ஜப்பானில் ஆயிரம் வருடங்களுக்கு மேல் தலைநகரமாக இருந்த கியோட்டோவை, புனித நகரம் என்றே சொல்லலாம். ஏராளமான புத்த மடங்கள் அங்கிருக்கின்றன. இரண்டாம் உலகப் போரின்போது, பலத்த விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பின் இந்நகரின் மீது அணுகுண்டு வீசப்பட வேண்டாம் என்று ரூஸ்வெல்ட்டின் தலைமையில் இயங்கிய அமெரிக்க அரசு முடிவு செய்தது. இதற்குக் காரணம் ஹென்றி ஸ்டிம்சன். அவர் இரண்டாம் உலகப் போரின்போது, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தும் கூட, இந்நகரத்தின் மீது அணுகுண்டு வீசப்படக்கூடாது என்று உறுதியாக இருந்தாராம். காரணம், தனது தேனிலவுக்காக அவர் சென்ற இடம் இதே கியோட்டோ நகரம். அப்போதும், அதற்குப் பிறகு அரசு அதிகாரியாக அங்கு சென்றபோதும், ஆசியாவின் மிகப்பெரும் கலாச்சார பண்பாட்டுத் தளம் கியோட்டோ என்பதை அவர் உணர்ந்திருந்தார்.” மூச்சு விடாமல் விளக்கம் வாசித்த ஈஸ்வரி, “எதுக்காக சங்கு கியோட்டோ பத்திக் கேக்குற? ஒன்னோட ஹனிமூனுக்கு அங்க போகப் போறியா” என கண் சிமிட்டி, சிரித்தாள்.
அவளது கிண்டலை ரசிக்க மனமில்லாத சங்கவை, “நீண்ட பயணம் செய்ததுபோல் களைப்பாக இருக்கிறது. துயில்கொள்ளச் செல்கிறேன்.” என்று கண்களை மூடிக்கொண்டாள். அடுத்த கணமே தூங்கியும் போனாள். தன் தலையில் தட்டிக்கொண்ட ஈஸ்வரி, “நாம இதுவரைக்கும் கேட்காத தமிழ்ல அவ பேசுனதக் கவனிச்சியா தமிழ்?” என்றாள் குழப்பத்துடன்.
“எனக்குந்தான் புரியவில்லை” என்றாள் தமிழ்ச்செல்வி குழப்பம் நிறைந்த பார்வையை சங்கவையின் முகத்தில் பதித்தபடி.

((( அத்தியாயம் 10 முற்றும் )))

அத்தியாயம் - 9

படலைக் கதவுக்கு வெளியே நின்று அக்கா வீட்ல இருக்கீயளா என்று தயக்கமாகக் குரல் கொடுத்தான் பூத்துரை. பதிலெதுவும் வராது போகவே மருதாயிக்கா, மருதாயிக்கா என்று சற்று குரல் உயர்த்திக் கூப்பிட்டுப் பார்த்தான். அப்போதும் வீட்டிற்குள்ளிருந்து பதில் குரல் எழவில்லை. நாழி ஓடுகள் வேயப்பட்டிருந்த அந்தச் சிறிய வீட்டைச் சுற்றிப் போடப்பட்டிருந்த தென்னங்கிடுகுகள் அவனுக்கு வித்தியாசமாகத் தோன்றின. காரைவீட்டுக்கு காம்பவுண்டுச் சுவர் போல இந்த ஓட்டு வீட்டுக்கு தென்னங்கிடுகுப் பாதுகாப்பா? கொள்ளையடித்துக்கொண்டு போவதற்கு மருதாயிக்கா அப்படி என்ன பதுக்கி வைத்திருக்கிறாள்? மற்றவர்கள் வயலில் வேலை செய்து பிழைப்பவளுக்கு குவித்து வைப்பதற்கு நெல் மூட்டையும் இருக்கப்போவதில்லை. யோசித்தபடி மீண்டும் உரத்த குரலில், “ஏ மருதாயிக்கா உள்ள இருக்கீகளா?” எனக் கூப்பிட்டான். அந்த வழியாக சைக்கிளில் வந்த பரமசிவம், சைக்கிளை இவன் பக்கம் நிறுத்திவிட்டு, ஏன் அண்ணாச்சி ஊருக்கே கேக்குறாப்ல கத்தீட்டிருக்கீக என்று சிநேகத்துடன் கேட்டான்.
“ஒண்ணுமில்ல பரமு, மருதாயிக்காவ பாக்கணும்.” என்றான் தலையைச் சொறிந்துகொண்டே பூத்துரை.
அதுக்கேன் எங்க ஊரு மாப்பிள்ளை இப்படி நெளியிறீக? முத்தாலங்குறிச்சியில பொண்ணு கட்டுனவக நிமிந்து நிக்க வேண்டாமா அண்ணாச்சி? அதுவும் எங்க ராஜகனி மைனிய கட்டிக்கிட்டு...?
பூத்துரை இப்போது இன்னும் அதிகமாக நெளிந்தான்.
“மருதாயி அக்காகிட்ட ஒரு விஷயம் கேட்டுப்புட்டுப் போலாம்னு வந்தேன்.”
“தாராளமா கேளுங்க. உள்ள போய் இருக்காகளான்னு பாருங்க.”
“ரொம்ப நேரமா கூப்பிட்டுப் பாத்துட்டேன். ஒரு அசைவையும் காணோம். ஒரு வேள அக்கா தூங்கிட்டிருக்காகளோ என்னவோ.”
பரமசிவம் சிரித்துவிட்டான். “காத்துக்கு ஏதுண்ணே தூக்கம்? மருதாயி அத்த அர்த்த ராத்திரியில கூட வெருவு கணக்கா முழிச்சிக்கிட்டு வௌக்குமாரு கட்டிக்கிட்டிருக்கும். வித்தா நாலு காசு கெடைக்குமேன்னு...” பரமசிவத்தின் வார்த்தைகளில் ஆதங்கம் தெரிந்தது. பிறகு அவனே தொடர்ந்து, “தமிழ்ச்செல்வியப் படிக்க வைக்கிறதுக்கு உயிரைக் கூட விட்ரும்ணே. அதுக்குத் தூக்கமா பெருசு” என்றான். சொல்லிவிட்டு, “அத்தை, மருதாயித்த” எனக் கூப்பிட்டான். இப்போதும் பதில் ஏதும் இல்லாமல் போகவே, சைக்கிளை விட்டு இறங்கி வந்து படலைக் கதவைத் தள்ளினான். தரையில் சாப்பாடு பரிமாறலாம்போல மிக, மிக சுத்தமாக வைக்கப்பட்டிருந்த முற்றத்தையும், அதிலிருந்த ஏராளமான செடிகளையும், பூக்களையும் பார்த்ததும், அந்த ஓட்டு வீட்டைச் சுற்றி ஏன் தென்னங்கிடுகுகள் போடப்பட்டிருக்கின்றன என்று பூத்துரைக்குப் புரிந்துபோனது. முற்றத்தின் ஒரு பக்கத்தில் ஒரு நார்க் கட்டில் போடப்பட்டிருந்தது. மூலையில் தேங்காய் சிரட்டையிலிருந்த உமிச் சாம்பலில் இருந்த ஈரப்பதம் கண்டதும், அப்போதுதான் பாத்திரங்கள் தேய்க்கப்பட்டிருக்கின்றன என்பது தெரிந்தது. அதற்கேற்றாற்போல் மரப்பலகையின் மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்த இரண்டு எவர்சில்வர் கிண்ணங்களும் தட்டுக்களும் மாலை வெயிலில் பளபளத்தன. சுற்றிலும் இருந்த செடிகளில் கேந்திச் செடிகள் அதிகமாய்த் தெரிந்தன. சின்ன ஆரஞ்சுப் பந்துகள் போல் பூத்திருந்த செண்டுப் பூக்களின் மலர்ச்சியில் திருமணமான புதிதில் ராஜகனி சிரிக்கும் சிரிப்பு தெரிந்தது. அவளது சிரிப்பிலும் உதடுகளைத் திறக்காமல் அவள் காட்டும் கிறங்கடிக்கும் புன்னகையிலும் அவன் கண்ட போதையை எப்போதாவது திருவிழா சமயங்களில் பருகிய பட்டைச் சாராயத்திலும் பார்த்ததில்லை. பிச்சிக் கொடியில் பூத்துக் குலுங்கிய பிச்சிப் பூக்களின் வாசம் அவளது கூந்தலின் மணமாக மனதில் வந்து மோதியது. சாயங்காலமானால் போதும். தலையில் தேங்காய் எண்ணெயை அழுந்தத் தேய்த்து, நீண்ட கூந்தலைப் படிய வாரி, பின்னல் சடை போட்டு, குறைந்தது ஐந்து முழம் பிச்சிப் பூவையாவது அதில் தொங்கவிட்டிருப்பாள் ராஜகனி. முகத்தில் வற்றாத உற்சாகத்தையும், நடையில் சந்தோஷத் துள்ளலையும் மட்டுமே அவன் பார்த்திருக்கிறான். ஆனால் பயனற்றுப் போனதால் மறுநாள் காலையில் வாடிப்போய் உதிரும் பிச்சிப் பூக்கள் போல சில காலமாய் வாட்டமுற்றுக் காணப்படும் ராஜகனியின் முகம் நினைவுக்கு வந்து வேதனையைக் கொடுத்தது.
“என்ன அண்ணாச்சி, என்ன யோசனை?” பரமசிவம் தோள்களைப் பிடித்து உலுக்கினான்.
“ஒண்ணுமில்ல... எவ்வளவு செடிகளும் பூக்களும்பா. ரொம்ப அழகா இருக்கு பரமு!”
சிவப்பு, வெளிர் சிவப்பு, வெள்ளை நிறத்தில் மலர்ந்திருந்த ரோஜாப் பூக்களை சுட்டிக் காட்டிய பரமசிவம், “பக்கவட்டியிலிருந்து இந்தச் செடிகளை நான் தான் கொண்டாந்தேன். நாட்டு ரோஜாப் பூக்கள்னா தமிழுக்கு ரொம்ப இஷ்டம்” என்றான். பிறகு, “நெசமாவே அத்தை வீட்ல இல்ல போல. இல்லைனா இந்நேரம் வரைக்கும் உள்ள இருக்காது.” என்றான்.
அப்புறமா வரலாம் என்று பரமசிவத்துடன் வெளியில் வந்த பூத்துரையிடம், “சைக்கிள்ல ஏறுங்கண்ணாச்சி. வீட்ல கொண்டுபோய் விட்டுடறேன். இல்லன்னா எம் புருஷன நடக்க வச்சிட்டியான்னு மைனி திட்டும்.” என்று உரிமையுடன் கைகளைப் பற்றிய பரமசிவத்தின் சைக்கிளில் பூத்துரை ஏறப்போன சமயத்தில், “என்ன வந்துட்டு ஒடனே கிளம்பிட்டீய? அதான் நான் வந்துட்டேனேய்யா” என்ற மருதாயின் குரல் கேட்டு நின்றார்கள். ஓட்டமும் நடையுமாக ஒரு கையில் ஆட்டுக் குட்டியைக் கட்டியிருந்த கயிற்றைப் பிடித்துக்கொண்டு, மறு கையில் குழையுமாக வந்த மருதாயி, காப்பித் தண்ணி குடிச்சிட்டுப் போகலாம் வாங்க” என்றாள். அவள் குரலில் இருந்த பாசம் கண்களிலும் தெரிந்தது. பாசாங்கு இல்லாத பாசம் அது. அதே பாசத்தை எல்லாரிடமும் எல்லா சமயத்திலும் இயல்பாக அவள் காட்ட முடிவதை பரமசிவம் கவனித்திருக்கிறான். “பூத்துரை அண்ணாச்சிதான் ஒங்களப் பாக்கணும்னு வந்துருக்காக அத்த!”
“அதனால நீ வரமாட்டியாக்கும் பரமு! நீ நட்டுவச்ச ரோசாச் செடி எம்புட்டுப் பூ பூத்திருக்கு பாத்தியா?” என அவன் கைகளைப் பற்றி அழைத்தாள். அந்த ரோஜாப் பூக்களிடம் கூட இல்லாத அழகு உழைப்பில் களைத்துப்போன அவளது கண்களில் வழியும் கனிவில் இருப்பதாகப் பட்டது பரமசிவத்துக்கு.
“ஆமா அத்த பாத்தேன். நாட்டு ரோஜாப்பூ வாசம் ஊரையே தூக்கிட்டுப் போகுது.”
“வெள்ளாட்டுக் கெடாவயும் வளக்குறியாக்கா! எப்படி? செடி கொடி காவலுக்காக சுத்திலும் கிடுக போட்டுட்டு ஆடு வளர்த்தா எப்படிக்கா” என்றான் பூத்துரை.
ஆட்டுக்குட்டியின் முதுகைப் பரிவுடன் தடவிக் கொடுத்த மருதாயி, “ஆண்டிப்பட்டி சந்தையில செண்டு ஆசைபட்டு வாங்கினது.” என்றாள்.
“அத்தை அவுக மவ தமிழ்ச்செல்விய எப்பவும் செண்டுன்னுதான் கூப்பிடும்.” என்று பூத்துரையிடம் கூறிய பரமசிவம், “தமிழு ஆடுன்னா செடிய மேயாதா அத்தை.” எனச் சிரித்தான்.
“நெசந்தான் பரமு. மோந்து பாக்குறக்குக் கூட செடிகிட்ட போறதில்ல.” என வெகுளியாய் சிரித்த மருதாயி, வீட்டு முற்றத்தில் தெற்கு மூலையில் இருந்த மலை வேம்பு மரத்தில் அதைக் கட்டிவிட்டு “இதுக்குக் கொழ புடுங்கிட்டு வரலாம்னுதான் போனேன். அதுக்குள்ள கோவங்காட்டாளுக்கு தலைய நோவுதுன்னு வந்து சொன்னாக. ஒரு எட்டு போய் சுக்கு சொரசம்பண்ணி குடுத்துட்டு வர்றேன்” என்று ஆட்டின் முன் குழையைப் போட்டுவிட்டு சருவச் சட்டி நிறைய தண்ணீர் எடுத்து அதன் முன் வைத்தாள்.
மூவரும் உள்ளே சென்றதும் இரண்டு மரப்பலகைகளை எடுத்துப்போட்டு உட்காரச் சொன்னாள். பூத்துரை முதல் முறையாக வீட்டினுள் வந்திருந்ததால் சுற்றிலும் பார்வையிட்டான். சிமெண்டு தளம் போடப்பட்ட சற்று விசாலமான ஒரே அறை. மூலையில் மண்ணெண்ணெய் ஸ்டவ். பக்கத்திலேயே குறைவான பாத்திரங்கள். தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டிருந்த செம்புத் தவலைக்குப் பக்கத்திலிருந்த பித்தளைக் கும்பா புத்தம் புதிதாகப் பளபளத்தது. பூத்துரையின் பார்வை அதன் மேல் பதிந்திருப்பதைக் கண்ட மருதாயி, “கல்யாணம் கட்டிக்கிட்டு வந்தாப்ல எங்காத்தா எனக்குக் கொடுத்த சீதனம். இதுலதான் செண்டு சின்ன வயசுல பழைய கஞ்சியோட வாழைப்பழம் போட்டு பெசஞ்சு சாப்பிடுவா” என்றாள்.
“புதுசா அப்படியே கடையில வாங்கினமாதிரி இருக்குக்கா.” மருதாயி சிரித்தாள்.
“இந்த கும்பாவத்தான் தமிழு பள்ளிகூடத்துக்குக் கொண்டுவருவா அத்தை.” என்றான் பரமசிவம்.
ஓரமாக இருந்த டப்பாவைத் திறந்து நான்கைந்து முறுக்குகளை எடுத்து “அடைக்கலப் பட்டணத்திலேருந்து மைனி வந்திருந்தாக. அவுக வாங்கிட்டு வந்தது.” என்று இருவரது கையிலும் கொடுத்தாள்.
“அவுக வீட்டுக்காரரு செத்துப்போனதுலேருந்து ரொம்பத் தவங்கிட்டாகல அத்த” என்ற பரமசிவத்திடம், “ஆமா பரமு, அவுகளப் பார்த்தா மனசுக்குக் கஷ்டமா இருக்கு.” என்றாள். பிறகு, “இந்தா வந்திடுதேன்” என்று வெளியில் ஓடினாள். முறுக்கைக் கடித்த பரமசிவம், அரிசி முறுக்கு அண்ணாச்சி என்று சொல்லிவிட்டு மீண்டும் அந்த கும்பாவின் மேல் பார்வையைச் செலுத்தினான். தமிழும் அவனும் சின்ன வயதில் போட்டுக்கொண்ட சண்டை, எவ்வளவு தூரம் தமிழ் தன்மான உணர்வு கொண்டவள் என்பதை நெஞ்சில் பதிய வைத்து அவள் மேல் மதிப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்திய அந்த நிகழ்ச்சி சட்டென்று மனக்கண்ணில் தோன்றியது.
உள்ளூர் ஆரம்பப் பள்ளியில் அவர்கள் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதுதான் அந்தச் சண்டை நடந்தது. சத்துணவு சாப்பிட ஊர்ப் பிள்ளைகள் பெரும்பாலும் அலுமினியத் தட்டு எடுத்து வருவார்கள். தமிழ் மட்டும் இந்தப் பளபளக்கும் பித்தளைக் கும்பாவுடன் வருவாள். வரிசையில் உட்கார்பவள், பரிமாறுவதற்கு சத்துணவு ஆயா பக்கத்தில் வரும் வரைக்கும் அதைக் கீழே கூட வைக்காமல் மடியிலேயே வைத்திருப்பாள். உணவு சரியாகப் பரிமாறப்படுகிறதா என்று கண்காணிக்க வரும் ஹெட்மாஸ்டர் சார்வாள், “ஏ புள்ள கும்பாவைக் கீழ வை” என அதட்டினால்தான் கீழே வைப்பாள், கும்பாவுக்கும் தரைக்கும் நோகாதபடி! சாப்பாடு பரிமாறப்பட்டு சார்வாள் அந்தப் பக்கம் போனதும் கும்பாவைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்கு நடையைக் கட்டிவிடுவாள். முற்றத்தில் அமர்ந்து ஆத்தாவுக்கு ஒரு வாயாவது கொடுத்துவிட்டுதான் சாப்பிடுவாள். பரமசிவம் ஓரளவு வசதியான வீட்டுப் பையன் என்பதால் அவன் அம்மா ஒருபோதும் சத்துணவு சாப்பாடு சாப்பிட அனுமதித்ததில்லை. ஆனாலும், சாப்பாட்டை வேடிக்கை பார்த்துவிட்டுப் போவது அவன் வழக்கம். ஒரு நாள் அவள் பின்னாலேயே சென்ற பரமசிவம், “ஏ தமிழு ஒனக்கு மட்டுமென்ன தனிச் சட்டமா? நீயும் பள்ளிகோடத்துல ஒக்காந்துதானே சாப்பிடணும்” என்று வம்பிழுத்தான்.
“போடா தடியா ஒன்னோட வேலைய பாரு.”
“இன்னிக்கு ஒன்ன நான் வீட்டுக்கு உடமாட்டேன்.”
“உங்க மாமா ஊரு நாட்டாமன்னா அத ஒங்க வீட்டுக்குள்ள வச்சுக்கோ. போடா.” சொல்லிவிட்டு அவள் பாட்டுக்கு நடந்துகொண்டிருக்க, எதிர்பாராத தருணத்தில் கும்பாவைப் பிடுங்கி எறிந்தான் பரமசிவம். அதிர்ச்சியில் நிலைகுலைந்த தமிழ்ச்செல்வி, அதிலிருந்து விடுபட்டதும் ஓவெனப் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினாள். வரிசையாகப் படர்ந்திருந்த சொடக்குத் தக்காளிச் செடிகளுக்கு மத்தியில் போய் விழுந்திருந்த கும்பாவைக் கையில் எடுத்தவள், சிதறிக் கிடந்த சாம்பார் கலந்த சோற்றுப் பருக்கைகளை மண் ஊதி எடுக்க முடியுமா என்று அழுதுகொண்டே முனைந்தாள். அது முடியாது எனத் தெரிந்ததும் அங்கேயே கால்களை நீட்டி அமர்ந்து, “ஆத்தா சோத்த கொட்டிவிட்டுட்டான் தடியன்” என்று நெஞ்சில் அறைந்துகொண்டு எழவு வீட்டு ஒப்பாரி போலக் கத்தத் தொடங்கியிருந்தாள். அவ்வப்பொழுது தன் அம்மா, அப்பாவுடன் சண்டை போட்டுக்கொண்டு, “இந்த பாழாப் போன மனுஷன் கையில என்ன புடிச்சுக் கொடுத்து வாழ்க்கைய சீரழிச்சுட்டீகளே ஐயா. அண்ணன் தம்பியெல்லாம் இருந்தும், பாத்து, பாத்து பாழுங்கெணத்துல தள்ளிவிட்டுட்டீகளே ஆத்தா” என்று நடு வீட்டில் கால்களைப் பரப்பி உட்கார்ந்து தலைவிரி கோலமாக நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுவதும், அப்போது தன் தந்தை கருங்கல்லைக் கொண்டு வந்து “எதுக்குப் புள்ள கையால அடிச்சிக்கிட்டு அழுவுற, கை நோவப்போகுது. இந்தக் கல்லால அடிச்சுக்கிட்டு அழு. சட்டுனு போய் சேந்துட்டேனா நான் நிம்மதியா இருப்பேன்.” என்று சொல்வதும் நினைவுக்கு வர, அவனும் அதேபோல ஒரு கல்லைக் கொண்டு வந்து அவளிடம் நீட்டி, “இதால அடிச்சுக்க தமிழு.” என்றான். அவ்வளவுதான். அவளுக்கு ஆத்திரம் தலைக்கு மேல் ஏறியது. எழுந்த வேகத்தில் குத்தியிருந்த ஊக்கு கழன்றுகொள்ள கீழே நழுவிய சாயம் வெளுத்துப்போயிருந்த பூப்போட்ட சீட்டிப் பாவாடையை இறுகப் பற்றி அதே வேகத்தில் ஊக்கினை மாட்டிக் கொண்டவள், அவன் கையிலிருந்த கல்லைப் பிடுங்கி அவன் மேல் வீச முற்பட்டாள். அவள் முகத்திலிருந்த ஆவேசத்தைப் பார்த்துப் பயந்துபோன பரமசிவம் வரம் கொடுத்துவிட்டு கொடுத்த வரத்தை பரீட்சித்துப் பார்ப்பதற்காகத் தன் தலையிலேயே கை வைக்க வந்த அசுரனிடமிருந்து சிவபெருமான் தப்பிக்க ஓடிய அதே வேகத்துடன் ஓட்டமெடுத்தான். வழியில் ஒடமரத்துக் கிளையில் சட்டை மாட்டிக்கொண்டு கிழிந்துபோக, எதிரில் வந்த பெருமாள் சட்டையை விடுவித்ததுடன், பின்னால் ஓடிவந்த தமிழுடைய கையிலிருந்த கல்லைப் பிடுங்க முயற்சிக்கவும் அவள், “போடா கருவாயா. ஒம் மண்டைய ஒடச்சிருவேன்.” என மூச்சிறைக்க அவனைத் தாக்க முயன்றாள்.
“வேண்டாம் தமிழு” என்று பெருமாள் விலகிக் கொள்ள இன்னும் வேகமாக ஓடத் தொடங்கிய பரமசிவம், தங்கள் வீட்டு வாசலில் போய் பொத்தென்று விழுந்தான். துரத்தி வந்த தமிழ்ச்செல்வி கும்பாவைக் கீழே வைத்துவிட்டு வலது கையில் இருந்த கல்லால் அவன் தலையில் அடிக்கப் போனாள். பிறகு திடீரென்று பலம் இழந்தவள் போல் அதைக் கீழே போட்டுவிட்டு கும்பாவை எடுத்து மார்போடு அணைத்தபடி அழ ஆரம்பித்தாள்.
“நீ நாசமா போயிருவ. வௌங்கவே மாட்ட, சோத்துல மண்ணள்ளிப் போட்டுட்டல்ல. தங்கம்மன் ஒங் கண்ண புடுங்கும். எங்க ஆத்தாவையும் என்னையும் பட்டினி போட்டுட்டல்ல” என்று ஏசத் தொடங்கினாள். சத்தம் கேட்டு வந்த பரமசிவத்தின் தாய், கல் பதித்த பொன் வளையல்கள் மினுங்கிய கைகளால் தன் மகனை அணைத்துக் கொண்டு, “ஏம்புள்ள அழுவுற? என்ன நடந்துச்சு?” என்று விசாரித்தாள். கலாட்டா ஓய்ந்திருக்குமா என்று மோப்பம் பிடிக்க வந்த பெருமாள், துணைக்கு ராசாவையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தான்.
“ஒங்க ரெண்டு பேருல யாருடா இவள அடிச்சது” என்று பரமசிவத்தின் தாய் கேட்டதும், “அய்யய்யோ நா இப்பத்தான் வர்றேன்” என்றான் ராசா அவசரமாக. தானும் அடிக்கவில்லை என தலையாட்டி மறுத்த பெருமாள், “தமிழை அழ வச்சது ஒங்க பரமசிவந்தான்” என்றான். உடனே நடந்ததை பரமு அப்படியே தன் தாயிடம் கூற, “இதுக்குத்தானா இவ்வளவு பெரிய அழிச்சாட்டியம் பண்ற தாயி? இரு வர்றேன்” என்று உள்ளே சென்றாள். வெளியில் வரும்போது ஒரு கையில் எவர்சில்வர் தட்டில் அப்போதுதான் வடித்திருந்த சம்பா அரிசிச் சோறும், இன்னொரு கையில் சிறு கிண்ணத்தில் மணக்க, மணக்க முருங்கைக்காய் சாம்பாரும் ஏந்தி வந்தாள். பொறிச்ச மொறக் கருவாடு எடுத்து வச்சிருக்கேன். போய் கொண்டா பரமு” என்று அவனைப் பணித்தாள். அவனும் ஓடிப் போய் எடுத்து வந்தான். நிறைய சின்ன வெங்காயம் போட்டு வறுத்திருந்த கருவாட்டைப் பார்த்ததும் பெருமாளுக்கும், ராசாவுக்கும் நாவில் நீர் சுரந்தது.
“இந்தா தாயி. எல்லாம் ஒனக்குத் தான். எடுத்துட்டுப்போய் ஆத்தாளோட சேர்ந்து வயிறார சாப்பிடு.” என்று எல்லாவற்றையும் அவளிடம் நீட்டினாள், பரமுவின் அம்மா. ஒரு கணம் அவள் நீட்டிய சாப்பாட்டைப் பார்த்த தமிழ்ச்செல்வியின் முகம் அவமானத்தில் சிறுத்துப் போனது. உதடுகள் துடித்தன. கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடியே, “நான் பிச்ச சாப்பாட்டுக்காக வரல” என்றாள்.
“என்ன புள்ள பெரிய பேச்செல்லாம் பேசிக்கிட்டு? இந்தா புடி. பள்ளிகொடத்துச் சாப்பாட்டை விட இது நல்லாருக்கும்.”
“அது அரசாங்கம் நாங்க படிக்கிறதுக்காக எங்களுக்குக் கொடுக்குற சாப்பாடு; பிச்சையில்ல. நீங்க போடுறது பிச்சை. எனக்கு வேண்டாம். ஒழைக்காம வாங்குற எல்லாமே பிச்சன்னு ஆத்தா சொல்லுவா. நான் போறேன்.” என்று வெற்றுக் கும்பாவை தூக்கிக் கொண்டு கை வீசி நடந்தவளைப் பார்த்து, “பெரிய மனுஷி மாதிரி பேசிட்டுப் போறா ரோஷக்காரி. புள்ளைய நல்லாத்தான் வளத்திருக்கா மருதாயி.” என்று அவன் அம்மா சிலாகித்தபோது இவனுக்கும் தமிழ் மேல் பிரமிப்பும் மதிப்பும் ஏற்பட்டது. அதன் பிறகு அவளிடம் பின்னாலேயே போய் அவன் மன்னிப்புக் கேட்டதும் அவள் போடா என்று மன்னித்து நட்பாகிப் போனதும், பிறகு அதே தமிழ்ச்செல்வி கோபமே எழாதவளாக பக்குவப்பட்டு மாறிப் போனதும் எல்லாமே நேற்று நடந்ததுபோல் தோன்றியது பரமசிவத்துக்கு. அந்த பித்தளைக் கும்பாவை கையில் எடுத்துப் பார்த்தான். அதில் மருதாயி என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. கீழே வைத்துவிட்டு பூத்துரை பக்கம் திரும்பினான். அவன் தலையில் கையை வைத்தபடி கண்களை மூடி விளங்கிக்கொள்ள முடியாத சோகம் முகத்தைக் கவ்வியிருக்க அமர்ந்திருந்தான். விஷயம் என்னவாயிருக்கும் என்று பரமசிவம் யோசித்துக்கொண்டிருந்த அதே வேளையில் உள்ளே வந்த மருதாயி, “செண்பா கடை டீ. ஏலக்கால்லாம் தட்டிப்போட்டுக் கொடுத்திருக்கா. அவ கடைய மூடுறதுக்குள்ள வாங்கணுமேன்னு ஓடிப்போய் வாங்கிட்டு வந்தேன்.” என்று செம்பிலிருந்த டீயை இரண்டு டம்ளர்களில் ஊற்றி அவர்கள் கையில் கொடுத்தாள். டீ குடித்து முடிக்கும் வரைக்கும் யாரும் எதுவும் பேசவில்லை.
“வெவரம் என்னன்னு சொல்லு பூத்துரை.” என்று மருதாயி வினவியதும் பூத்துரை சற்று தயங்குவதுபோல் தெரிந்தது.
“ஆத்தா தேடிட்டிருக்கும். நான் அப்புறமா வர்றேன் அத்தை. நீங்க பேசிட்டு வாங்க அண்ணாச்சி” என்று பரமசிவம் எழுந்து போனான்.
பூத்துரை நிமிர்ந்து பக்கத்தில் வந்தமர்ந்த மருதாயியைப் பார்த்தான். அதிகம் போனால் அவளுக்கு நாற்பது வயதிருக்கலாம். ஆனால், அறுபது வயதுக் கிழவி போல தொளதொளவென்று வெள்ளைச் சட்டையும் சுருங்கிப் போன நீலநிறச் சேலையுமாக ஒரு வயதான பெண்ணின் பாவனையை அவள் வலிந்து ஏற்படுத்த முனைந்திருப்பதுபோலத் தோன்றியது. இளமைத் தோற்றம் மாறாத முகத்தின் பொலிவும் உடம்பின் மென்மையும் வாளிப்பும் யாருடைய கண்களையும் உறுத்தாதபடி ஒரு முதிர்ந்த கோலத்தை அவள் திட்டமிட்டே உருவாக்கியிருக்கிறாளோ? சின்ன வயதில் புருஷனை இழந்ததால் யாருடைய பார்வையும் தன் மீது படர்ந்துவிடக் கூடாது என்ற அதி ஜாக்கிரதை உணர்வின் வெளிப்பாடுதான் இந்தக் கோரமோ? ராஜகனிக்கும் இந்த நிலைமை ஏற்பட்டுவிடுமோ என்று குழம்பிக்கொண்டிருந்த அவனது தோள்களில் தட்டி,
“என்ன இம்புட்டு கவலையா இருக்கீக தம்பி? நான் என்ன செய்யணும் சொல்லுங்க.” என மிகுந்த கரிசனத்துடன் கேட்டாள் மருதாயி. அவன் அப்பொழுதும் அமைதியாய் இருக்கவே, “ராஜகனி நல்லாயிருக்கால்ல. நேத்துக் கூட பாத்தேன். தூரத்தில பாத்ததுனால பேச முடியல. அவளுக்கெதுவும் பிரச்சனையா?” எனக் கேட்டாள்.
“நான்தான் பிரச்சனை.” மருதாயின் காதுகளுக்கு எட்டாமல் முணுமுணுத்தவன் தயங்கியபடி, “அக்கா ஒங்க மலவேம்பு மரத்திலேர்ந்து கொஞ்சம் கொழ பறிச்சுத் தர முடியுமா?” என்று கேட்டான். மருதாயி கலகலவென்று சிரித்தாள். அவளுக்கு வியப்பாக இருந்தது. ஆண்டிப்பட்டி ஊரிலேயே வசதியான குடும்பம் பூத்துரையுடைய குடும்பம். இரண்டு அண்ணன்களும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்துகிடந்த நிலங்களைப் பார்த்துக்கொள்ள வீட்டிலிருந்த இருநூறுக்கும் மேற்பட்ட செம்மறியாடுகளை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு பூத்துரையடையதாய் இருந்தது. ராஜகனியைத் திருமணம் செய்து கொடுத்தபோது, “மாப்பிள்ளை படிக்கல. எழுதப் படிக்கத் தெரியாது. ஆனா வசதியா இருக்காக. நம்ம பிள்ளதான் பத்தாங்கிளாஸ் வரைக்கும் படிச்சிருக்காளே. வரவு-செலவுக் கணக்கெல்லாம் பாத்துக்குவா.” என்று பெருமைபட்டுக் கொண்டார்கள் அவளது பெற்றோர்கள்.
“வசதியான வீட்டுப் புள்ள. சும்மா கெடக்கிற மலவேம்ப கேக்குறதுக்கு இவ்ளோ யோசிக்கிறீயளே? வாங்க. இப்பவே பறிச்சுக்கோங்க.” என்று எழுந்தாள் மருதாயி. அவனோ எழுந்துகொள்ளாமல், “மலைவேம்பு எல சாப்டா புள்ள பொறக்கிறதுல ஏதாவது கொறை இருந்தா தீந்திருமா” என்று மிகவும் சங்கடப்பட்டுக் கொண்டு கேட்டான். அப்போது அவளுடைய முகத்தைப் பார்க்க முடியாமல் தலையை தாழ்த்தியிருந்தான். சட்டென்று அவன் பக்கத்தில் சம்மணமிட்டு அமர்ந்த மருதாயி, “கல்யாணமாகி கொஞ்சம் வருஷம் ஆவுதேன்னு கவலப் படுதீயளா? ஒவ்வொருத்தருக்கும் கடவுள் ஒவ்வொரு மாதிரி எழுதியிருப்பாரு. ரெண்டுபேருக்கும் இன்னும் வயசிருக்கு. ஊர்க்காரவுக பேசுறாகன்னு கவலப்படாதிய. மனசப் போட்டு கொழுப்பாம சந்தோசமாயிருங்க.” என்றாள். பிறகு அவளே, “ராஜகனிக்கு ஒடம்புல எந்தக் கொறையும் இருக்காது. இந்த ஊர்ல புள்ள பெத்துக்குற ஒவ்வொரு பொம்பிளையும் பெத்துக்குறதோட சரி. அத எடுத்துக் குளிப்பாட்டி சோறு ஊட்டி தூங்க வச்சு, தோள்ல தூக்கிட்டு அலஞ்சதெல்லாம் ராஜகனி தான். புள்ளைங்கன்னா அவளுக்கு ரொம்ப இஷ்டம். அதனால கடவுள் அவளுக்குக் கண்டிப்பா இதுல கொறை வைக்கமாட்டாரு.”
“அவகிட்ட கொற இருக்குன்னு நான் சொல்லலியேக்கா. எங்க மாமியார்தான் மல வேம்புக் கொழய அரைச்சுக் குடிச்சா வயித்துல பூச்சியிருந்தா செத்துரும். புள்ள தங்கும்னு சொன்னாக. அதான் வந்தேன்.” என்றான். அவன் குரலில் தடுமாற்றத்தைவிட வேதனை அதிகம் இருப்பதாய் தோன்றியது மருதாயிக்கு.
“நாளைக்கு நானே அரைச்சு எடுத்தாரேன். கவலப்படாத பூத்துரை. எல்லாம் சரியாயிடும்.” பூத்துரை எழுந்து வெளியில் வர மருதாயி உடன் வந்தாள். பூத்துரை வானத்தை அண்ணாந்து பார்த்தான். மேகம் விலக உள்ளிருந்து பூத்த நிலவு வெள்ளை நிறக் கேந்திப் பூவாய் அவனுக்குத் தோன்றியது. மருதாயிடம் விடைபெற்றுத் திரும்பும் வழியில் தளர்ந்துபோன நடையைச் சரி செய்ய முயன்றபடி மீண்டும் வானத்தைப் பார்த்தான். நட்சத்திரக் கூட்டங்கள் எப்போதாவது ராஜகனியின் முகத்தில் திடீரெனத் தோன்றும் பருக்களை நினைவுபடுத்தின. சட்டென்று கடந்த மாதத்தில் இதேபோன்ற இரவு தொடங்கியிருந்த வேளையில் மூத்த அண்ணன் வெள்ளத்துரையின் மனைவி மல்லிகா நடுக் கூடத்தில் ராஜகனி கால்களில் விழுந்து எதையோ கெஞ்சிக் கேட்டதை தான் பார்க்க நேர்ந்ததும் அதுபற்றி அவளிடம் விசாரித்தபோது பதில் எதுவும் சொல்லாமல் அழுததும், தன்னை முத்தாலங்குறிச்சியில் கொண்டுவந்து விட்டுவிடும்படி மன்றாடியதும் நினைவுக்கு வந்தது. அதற்கெல்லாம் என்ன காரணம் என்பது அவனுக்கு இன்றுவரை விளங்கவில்லை. அன்று ராஜகனியின் காலில் விழுந்து கெஞ்சிய மல்லிகா அண்ணி அடுத்த நாளிலிருந்து தன்னிடமே, “ஒம் பொண்டாட்டிய அடக்கி வை. சீவி சிங்காரிச்சிக்கிட்டு எல்லார்கிட்டயும் பல்லிளிக்க வேண்டாம்னு சொல்லிவை.” என்று தூற்றத் தொடங்கியிருந்ததற்கும் காரணம் அவன் புத்திக்கு எட்டவில்லை.
ராஜகனி தன்னால் சந்தோஷப்பட முடியாது என்பது மட்டும் நிச்சயமாக அவனுக்குத் தெரிந்தது. எவ்வளவோ ஏமாற்றங்களுக்குப் பிறகும் ஒரு குழந்தையிடம் பரிவு காட்டுவதுபோல தன்னிடம் அன்பு செலுத்தும் அவளுக்குத் தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டான். ஆனால் என்ன செய்வது? யோசித்தபடியே மீண்டும் அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். நிலவு மேலும் பிரகாசமாய்த் தெரிந்தது.

< அத்தியாயம் 9 முற்றும் >